ஆமா, அவன் போனதுக்கு நீ ஏன் அழுத.. மனைவியை "டைவர்ஸ்" செய்த கணவர்!
ரியாத்: சவூதி அரேபியாவில், டிவி ரியாலிட்டி ஷோவிலிருந்து ஒருவரை வெளியேற்றியதை நினைத்து அழுத மனைவியை கணவர் விவாகரத்து செய்து விட்டார்.
ஷோ முடிந்து ஒரு மாதம் கழிந்த பிறகும் மனைவி அழுததால் கோபமடைந்து இந்த காரியத்தைச் செய்து விட்டாராம் கணவர்.
"பூஸ்ட் யுவர் அஸ்ஸட்" என்பது அந்த ரியாலிட்டி ஷோவின் பெயர். சவதியில் உள்ள ஒரு தனியார் தொலைக்காட்சியில் இது ஒளிபரப்பாகி வருகிறது. சம்பவத்தன்று அந்த நிகழ்ச்சியைப் பார்த்து முடித்த அப்பெண் தனியாக உட்கார்ந்து அழுது கொண்டிருந்தார்.
வெளியே போய் விட்டு வீடு திரும்பிய கணவர் என்னவோ ஏதோ என்று பயந்து போய் என்னாச்சு என்று விசாரித்துள்ளார். அதற்கு மனைவி, அந்த ஷோவிலிருந்து அவரை வெளியேற்றி விட்டனர். அதை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்று கூறியுள்ளார்.
அத்தோடு நில்லாமல் அவரது கண்களிலிருந்து தாரை தாரையாக கண்ணீர் கொட்டியது. இதைப் பார்த்துக் கோபமடைந்த கணவர், இன்னொரு ஆணுக்காக இப்படி அழுகிறாயே.. அவருக்கு ஷோவில் இடமில்லை. உனக்கு இந்த வீட்டில் இடமில்லை என்று கூறி தலாக் சொல்லி விவாகரத்து செய்து விட்டார்.
இந்த செயலுக்கு சமூக வலைதளங்களில் பலரும் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். கோபமெல்லாம் சரிதான். ஆனால் விவாகரத்து ரொம்ப ஓவர் என்று பலர் கூறியுள்ளனர்.
இதைப் போய் ஏன் பெரிதாக எடுத்துக் கொண்டார் இந்தக் கணவர். சாதாரண டிவி ,ஷோதானே இது என்று பலர் கருத்துக் கூறியுள்ளனர். கணவரின் செயல் சரி என்று அவருக்கு ஆதரவாக கருத்துக் கூறியுள்ளனர்.
பலர் இதைப் போய் ஏன் அப்பெண் கணவரிடம் சொன்னார். வேறு ஏதாவது காரணத்தைச் சொல்லி சமாளித்திருக்கலாமே. பொய் சில நேரங்களில் நல்லது என்று அப்பெண்ணுக்குப் பரிந்து பேசியுள்ளனர்.