செளதிக்கு பிரிட்டன் போர் விமானம் விற்பனை: ஒப்பந்தம் தயார்
சௌதி அரேபியாவுக்கு 48 டைஃபூன் போர் விமானங்களை விற்பதற்கான ஒப்பந்தம் கிட்டத்தட்ட இறுதி செய்யப்படும் நிலையில் இருப்பதாக பிரிட்டனின் விமான உற்பத்தி நிறுவனமான பிஏஈ சிஸ்டம்ஸ் கூறியுள்ளது.
பிரிட்டனின் பாதுகாப்புத் துறை செயலாளர் கேவின் வில்லியம்சன்னை, செளதி இளவரசர் முகமது பின் சல்மான் சந்தித்த பிறகு இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
எங்கள் மதிப்பு மிக்க கூட்டாளியுடன் இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்படுவது ஒரு நேர்மறையான நடவடிக்கை என பிஏஈ சிஸ்டம்ஸ் கூறியுள்ளது.
65 பில்லியன் பவுண்டு மதிப்பிலான வணிகம் மற்றும் முதலீட்டு இலக்கு செளதி இளவரசரின் பிரிட்டன் பயணத்தின் போது ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது என பிரிட்டன் தரப்பு கூறியுள்ளது.
டைஃபூன் போர் விமானங்களுக்கான தேவைக் குறைந்ததால், 2,000 பேரின் வேலைகளைக் குறைப்பதாக பிஏஈ சிஸ்டம்ஸ் அறிவித்த பிறகு இந்த ஒப்பந்தம் நடைபெற்றுள்ளது.
இந்த அறிவிப்பு, பிரிட்டனின் விமான உற்பத்தித் துறைக்கு ஊக்கத்தை கொடுத்துள்ளது. அதே நேரம், இது மனித உரிமைக்கான மற்றும் போருக்கு எதிரான போராட்டக்காரர்களுக்கு அடியாக அமைந்துள்ளது.
செளதி அரேபியாவின் மோசமான மனித உரிமை நடவடிக்கையால், அந்நாட்டுக்கு ஆயுதங்களை விற்க இவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஏமனில் நடக்கும் சண்டையில் அதிகளவு பொது மக்கள் இறப்பதற்கு செளதியின் விமானத் தாக்குதலே காரணம் எனவும் அவர்கள் கூறுகின்றனர்.
இது குறித்த பிரிட்டனின் கவலைகளை, செளதி இளவரசர் உடனான இரவு விருந்தின் போது, பிரிட்டன் பிரதமர் தெரிசா மே எழுப்பியதாக தகவல்கள் கூறுகின்றன.
இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு வெளியாவதற்கு முன்பே பிஏஈ சிஸ்டம்ஸின் பங்கு 2% உயர்ந்துள்ளது.
பிற செய்திகள்:
- காஷ்மீர்: ராணுவத்தினர் மீது நடவடிக்கை எடுக்க அனுமதி கோரும் காவல்துறை
- உலகப் பார்வை: பதவி விலகுகிறார் ஆப்பிரிக்காவின் ஒரே பெண் தலைவர்
- அமெரிக்கா-வடகொரியா பேச்சுவார்த்தை: இனி என்ன நடக்கும்?
- செல்வந்தர்கள் பட்டியலில் ஆதிக்கம் செலுத்தும் சீனப் பெண்கள்
- இலங்கை: ”தமிழர் இலக்கு வைக்கப்பட்டது போல முஸ்லிம்கள் மீது இலக்கு”