கூட்ட நெரிசலில் 700க்கும் மேற்பட்ட ஹஜ் பயணிகள் பலி.. விசாரணைக்கு சவுதி அரசு உத்தரவு
சவுதி அரேபியா: மெக்கா மசூதி அருகே மினா நகரில் ஏற்பட்ட திடீர் நெரிசலில் ஹஜ் பயணிகள் 719 பேர் பலியான சம்பவம் தொடர்பாக உயர்மட்ட விசாரணை நடத்த சவுதி அரேபியா அரசு உத்தரவிட்டுள்ளது.
வாழ்நாளில் ஒருமுறையாவது மெக்காவுக்கு புனித பயணம் மேற்கொள்ள வேண்டும் என்பது இஸ்லாமியர்களின் ஐந்து முக்கிய கடமைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. அதனை நிறைவேற்ற உலகம் முழுவதிலும் உள்ள இஸ்லாமியர்கள் ஆண்டுதோறும் புனித பயணம் மேற்கொள்வது வழக்கம்.
இந்த ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொண்ட 20 லட்சத்திற்கும் அதிகமானோர் சாத்தான் மீது கல் எறியும் நிகழ்ச்சியில் பங்கேற்க மெக்கா நகரில் இருந்து ஒரே நேரத்தில் மினா நகரில் உள்ள ஹஜ் ஜமாத்துக்கு புறப்பட்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
வெயில் அதிகரிக்கும் முன்பாக திரும்பி விட வேண்டும் என்று ஒரே நேரத்தில் ஏராளமானோர் சென்றதால் திடீரென்று பலர் கீழே விழுந்தனர். ஒருவர் மேல் ஒருவர் விழ நெரிசலில் சிக்கி சுமார் 719 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், 1000க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
விபத்துக்கு காரணம்
ஹஜ் பயணிகள் விதிமுறைகளை பின்பற்றாத காரணத்தால் தான் விபத்து ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் தாலுக் ஃபாலிக் தெரிவித்துள்ளார்.
அரசு ஆலோசனை
ஹஜ் யாத்திரைக்கான ஏற்பாடுகளை கவனித்து வரும் உயரதிகாரிகளுடன் இந்த விபத்திற்கான காரணம் குறித்தும், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சவுதி அரேபியாவின் இளவரசரும், உள்துறை அமைச்சருமான முகமது பின் அப்தெல் அசீஸ் ஆலோசனை நடத்தினார்.
உயர்மட்ட விசாரணை
மினாவில் செய்தியாளர்களிடம் பேசிய முகமது பின் அப்தெல் அசீஸ், மெக்காவில் நிகழ்ந்த கோர விபத்து குறித்து விசாரணை நடத்த, குழு அமைக்கப்படும் எனத் தெரிவித்தார்.
மன்னரிடம் அறிக்கை
அந்தக் குழு அளிக்கும் விசாரணை முடிவுகள், சவுதி மன்னர் சல்மானிடம் சமர்ப்பிக்கப்படும் என்றும், அவர் உரிய நடவடிக்கை எடுப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.