ஆஹா.. ரோடு இல்லை, கார் கிடையாது.. மாசு என்ற பேச்சே வராது.. சவுதியில் உருவாகுகிறது சூப்பர் சிட்டி!
சவுதி: உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் ஏற்றுமதி நாடு சவுதி அரேபியா. சாலை இல்லாமல், கார் இல்லாமல், ஒரு துளி மாசு கூட உற்பத்தி ஆகாத நகரத்தை உருவாக்க போவதாக அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு முழுக்க முழுக்கவே பல ஆச்சரியங்களை சுமந்து வருகிறது. ஒரு கனவு நகரத்துக்கு என்னவெல்லாம் தேவையோ அத்தனை அம்சங்களும் இந்த நகரத்தில் இருப்பதாக சவுதி அரேபியாவின் முடி இளவரசர் முகமது பின் சல்மான் பேச்சில் இருந்து தெரிய வருகிறது.
உலகின் பல நாடுகளும் மரபுசாரா எரிசக்தி முறையை பயன்படுத்த ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளன. இந்தியாவிலும் கூட எலெக்ட்ரிக் வாகனங்கள் வருகை வருங்கால சந்தையை ஆக்கிரமிக்க போவதாக வாகன துறையினர் தெரிவிக்கிறார்கள்.
சவுதி அரேபியா முதலீடு திட்டம்
இதன் காரணமாக கச்சா எண்ணெய் ஏற்றுமதியால் கிடைத்து வரும் வருமானத்தில் கணிசமான அளவை சவுதி அரேபியா இழக்க நேரிடும். எனவேதான் மாற்று வழிகளில் முதலீடுகளை ஈர்த்து பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகளில் சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் ஈடுபட்டு வருகிறார். இதன் ஒரு அங்கமாக 2017 ஆம் ஆண்டு "Neom," என்ற பெயரிலான 500 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள ஒரு திட்டத்தை அறிவித்தார் இளவரசர்.
தொழில் நிறுவனங்கள்
முழுக்க முழுக்க அவரது சிந்தனையில் தோன்றிய திட்டம் இது என்று வர்ணிக்கப்படுகிறது. சவுதி அரேபியாவின் வட மேற்கு பகுதியில் 10 ஆயிரம் சதுர மைல் பரப்பிலான பகுதியை ஒரு முதலீட்டு மையமாக மாற்றுவதற்கான திட்டம் அதுவாகும். தொழில்நுட்பம் மற்றும் பல்வேறு வகையான தொழில் நிறுவனங்கள் இந்த பகுதியில் துவங்கப்படும் என்பது இளவரசரின் அறிவிப்பு.
சாலை இல்லா நகரம்
அதேநேரம் நிஜத்தில் இதுபோல முதலீடுகளை இருக்க முடியுமா என்ற கேள்விகள் அரசியல் ரீதியாக எழுந்தன. இப்போது அறிவிக்கப்பட்டுள்ள சாலை மற்றும் கார்கள் இல்லாத நகர திட்டமும் இந்த திட்டத்தின் ஒரு பகுதி என்று கூறப்படுகிறது. 170 கிலோமீட்டர் நீளத்திற்கான மேம்பாட்டு பகுதியாக உருவாகவுள்ளது இந்த நகர்ப்பகுதி.
பொதுப் போக்குவரத்து மட்டுமே
இப்போது இளவரசர் குறிப்பிட்ட நகரத்தில், 10 லட்சம் மக்கள் குடியிருக்கலாம். 3 லட்சத்து 80 ஆயிரம் பணியிடங்களை 2030ஆம் ஆண்டுக்குள் இந்த நகரம் உருவாக்கும். 170 கிலோமீட்டர் நீளமுள்ள (106 மைல்) இந்த வளர்ச்சி திட்டம் "தி லைன்" என்று அழைக்கப்படுகிறது. இந்த லைனில் 20 நிமிடங்களுக்கு மிகாமல் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குச் செல்லமுடியும். நகரை சுற்றிலும் அதிவேக பொதுப்போக்குவரத்து உருவாக்கப்படும். கார்கள் கிடையாது, தெரு கிடையாது. எனவே ஒரு சிறு மாசு கூட உற்பத்தி ஆகாது. மனித குலத்தில் இது ஒரு புரட்சி திட்டம். நம்முடைய வளர்ச்சிக்காக இயற்கையை பலி கொடுக்கக்கூடாது அல்லவா? இவ்வாறு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இளவரசர் முகமது பின் சல்மான் தெரிவித்துள்ளார். இந்த திட்டம் தொடர்பான மேலதிக தகவல்களை சவுதி அரசு இன்னும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.