சவுதி பட்டத்து இளவரசர் புரட்சியில் அடுத்த மைல்கல்... ஏப்ரல் 18 முதல் திரையரங்குகள் செயல்பட அனுமதி!
சவுதி பட்டத்து இளவரசர் புரட்சியில் அடுத்த மைல்கல்... ஏப்ரல் 18 முதல் திரையரங்குகள் செயல்பட அனுமதி!
ரியாத் : பல்வேறு மதக்கட்டுப்பாடுகளை கொண்டுள்ள சவுதி அரேபியா உலகத்திற்கேற்ப மாற்றங்களை கண்டு வருகிறது. இதன் அடுத்த கட்டமாக ஏப்ரல் 18ம் தேதி முதல் திரையரங்குகள் செயல்படும் என்று அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது. சுமார் 35 ஆண்டுகளுக்குப் பிறகு சவுதியில் மீண்டும் திரையரங்குகள் செயல்படத் தொடங்க உள்ளன.
சவுதியின் பட்டத்து இளவரசராக முகமது பின் சல்மான் பொறுப்பேற்றது முதல் பிற உலக நாடுகளைப் போலவே சவுதியிலும் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். பெண்கள் வாகனம் ஓட்டுவதற்கு விதிக்கப்பட்டு இருந்த தடை நீக்கம், விளையாட்டு மைதானங்களில் பெண்கள் போட்டிகளை கண்டுகளிக்கலாம் உள்ளிட்ட பல்வேறு விதிகள் தளர்வை கொண்டு வந்தார்.
இஸ்லாமிய கொள்கைகளை தீவிரமாக பின்பற்றி வரும் சவுதியில் பெண்களுக்கான மதக்கடுப்பாடுகள் மிக அதிகம். ஆனால் முககமது பின் சல்மான் பட்டத்து இளவரசராக பொறுப்பேற்றது முதல் சில விஷயங்களை மாற்றி வருகிறார். உலக நாடுகளுக்கு ஏற்ப நாமும் மாற வேண்டும் என்று சல்மான் தொடக்கத்திலயே கூறி இருந்தார்.
தியேட்டர்களுக்குத் தடை
சவுதி அரேபியாவில் மத கட்டுப்பாடுகள் மீறப்படுவதாகக் கூறி, கடந்த 1980ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில் பொதுவெளியில் சினிமாவுக்கு தடை விதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, சவுதியில் திரையரங்குகள் எங்கும் செயல்படவில்லை.
ஏப்ரல் 18 முதல்
இந்நிலையில், சுமார் 35 ஆண்டுகளுக்கு பிறகு முதன் முறையாக சவுதியில் சினிமாவுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி வரும் 18ஆம் தேதி முதல் திரையரங்குகள் செயல்படத் தொடங்கும் என கூறப்படுகிறது. இதற்கு அடுத்த கட்டமாக ஐந்து ஆண்டுகளில், சவுதியில் உள்ள 15 நகரங்களில் 30 முதல் 40 திரையரங்குகள் வரை திறக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
வேலைவாய்ப்பு கிடைக்கும்
சினிமா திரையரங்குகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளதால் பொழுதுபோக்குத்துறை வளர்ச்சி காணும் என்று சவுதி அரசு தெரிவித்துள்ளது. இது நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்களிப்பை ஏற்படுத்துவதுடன், பலருக்கு நிரந்தர வேலைவாய்ப்பையும் உருவாக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏஎம்சி நிறுவனத்தின் தியேட்டர்
ரியாத்தில் ஏப்ரல் 18ம் தேதி திரையரங்குகள் செயல்படத் தொடங்குவதையொட்டி உலகின் மிகப்பெரிய சினிமா நிறுவனமான ஏஎம்சி முதல் திரையரங்கை தொடங்குகிறது. இதனைத் தொட்ர்ந்து திரையரங்குகளின் எண்ணிக்கையை அதிகரிக்க ஏஎம்சி திட்டமிட்டுள்ளது.