'செஸ்' விளையாட தடை விதித்து பத்வா விட்ட சவுதியின் தலைமை இஸ்லாமிய மத குரு
ரியாத்: செஸ் விளையாடுவது இஸ்லாத்திற்கு எதிரானது என்று கூறி அதற்கு தடை விதித்து பத்வா விட்டுள்ளார் சவுதியைச் சேர்ந்த மத குரு ஷேக் அப்துல்லா அல் ஷேக்.
சவுதி அரேபியாவைச் சேர்ந்த தலைமை மத குருவான ஷேக் அப்துல்லா அல் ஷேக் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியது பற்றி தான் சவுதி மக்கள் விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.
டிவி நிகழ்ச்சியில் ஷேக் கூறுகையில்,
செஸ்(சதுரங்கம்) விளையாடுவது நேரம் மற்றும் பணத்தை வீணடிக்கும் செயல். இது சூதாட்டம் ஆகும். செஸ் ஆட்டத்தால் மக்களிடையே வெறுப்பும், விரோதமும் ஏற்படுகிறது. சூதாட்டம், சிலை வழிபாடு ஆகியவற்றிற்கு இஸ்லாம் தடை விதித்துள்ளது.
அதனால் செஸ் விளையாட தடை விதித்து பத்வா விடுகிறேன் என்றார்.
ஷேக் அப்துல்லா அல் ஷேக்கின் பத்வா ஒன்றும் அரசு சட்டம் இல்லை என்பதால் சவுதி மக்கள் செஸ் விளையாடுவதை தடுக்க முடியாது. முன்னதாக ஈராக்கைச் சேர்ந்த மூத்த ஷியா தலைவரான அயதுல்லா அலி அல் சிஸ்தானியும் செஸ் விளையாடுவதற்கு எதிராக பத்வா விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.