சவுதியில் வேலையிழந்து தவிக்கும் தொழிலாளர்கள்... சம்பள பாக்கியை வழங்க மன்னர் அதிரடி உத்தரவு!
ரியாத்: சவுதி அரேபியாவில், வேலையிழந்த தொழிலாளர்களுக்கு உடனடியாக சம்பள பாக்கியை வழங்குமாறு அந்நாட்டு மன்னர் சல்மான் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சவுதி அரேபியாவில், சில தனியார் நிறுவனங்களில் ஏராளமான தொழிலாளர்கள் வேலையிழந்தனர். குறிப்பாக சவுதி ஓஜர் மற்றும் சவுதி பின்லேடன் கட்டுமான நிறுவனங்களில் மட்டும் 2,500-க்கும் மேற்பட்ட வெளிநாட்டுத் தொழிலாளர்கள் வேலை இழந்தனர்.
இது போன்ற சில நிறுவனங்களில் பணியாற்றிய இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசத்தை சேர்ந்த 16,000 தொழிலாளர்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதில் 10,000-க்கும் மேற்பட்ட இந்தியர்களும் உள்ளனர். இவர்கள் சம்பளத்தையும் பெற முடியாமல் தாய்நாடும் திரும்ப முடியாமல் தவிக்கின்றனர். இது தொடர்பாக இந்திய அரசு சவுதி அரசிடம் கவலை தெரிவித்திருந்தது.
இந்நிலையில், தொழிலாளர்களுக்கு சம்பளப் பாக்கியை உடனடியாக வழங்க சவுதி மன்னர் சல்மான் உத்தரவு பிறப்பித்துள்ளார். இது தொடர்பான நடடிவக்கை மேற்கொள்ள அந்நாட்டின் நிதி அமைச்சகம், தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் ஆகியவற்றிற்கு சல்மான் உத்தரவிட்டுள்ளார்.
இந்த விவகாரத்தில், மன்னரே நேரடியாக தலையிட்டதையடுத்து, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பணியாளர்களுக்கு சம்பளப் பாக்கியை வழங்க முன்வந்தன. ஆனால் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலையில் நிறுவனங்கள் இருந்தன.
இதனை கருத்தில் கொண்ட மன்னர் சல்மான், தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க 100 மில்லியன் சவுதி ரியால்களை ஒதுக்கி உத்தரவிட்டுள்ளார். தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்குவதற்காக இந்த தொகை நிறுவனங்களுக்கு வழங்கப்படுகிறது. பின்னர் இந்த தொகை வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, சவுதியில் வேலையிழந்து தவித்த இந்தியர்களுக்கு, வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இந்தியாவில் இருந்து சவுதிக்கு உணவுப் பொருட்கள் அனுப்ப உத்தவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரம் தொடர்பாக, வெளியுறவுத்துறை இணை அமைச்சர் அந்நாட்டு தொழிலாளர் நலத்துறை அமைச்சரை சந்தித்து உரிய நடவடிக்கை எடுக்க கோரியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.
இந்தியாவுக்கு திரும்ப விரும்பும் தொழிலாளர்களுக்கு விசா மற்றும் டிக்கெட் வழங்கப்படும் என சவுதி அரசு தெரிவித்துள்ளது.