அமெரிக்காவில் நடைபெறும் அரபு நாடுகளின் தலைவர்கள் மாநாடு.. சவுதி மன்னர் போகவில்லை
துபாய்: வாஷிங்டனில் நடைபெற உள்ள அரபு நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தில் சவுதி மன்னர் சல்மான் கலந்து கொள்ள மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் வாஷிங்டனில் நாளையும் நாளை மறுநாளும் 6 நாடுகள் கொண்ட வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் ஈரான் அணுசக்தி திட்டம் தொடர்பான ஒப்பந்தம், சிரியா மற்றும் ஏமன் நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது.
இந்த மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டும் என சவுதி மன்னர் சல்மானுக்கு வெள்ளை மாளிகை வேண்டுகோள் விடுத்திருந்தது. ஆனால், இந்த மாநாட்டில் தான் கலந்து கொள்ளப் போவதில்லை என சவுதி மன்னர் சல்மான் அறிவித்துள்ளார்.
ஆனால், மன்னருக்குப் பதில் அவரால் நியமிக்கப்பட்ட பட்டத்து இளவரசர் முகமது பின் நயீப் இந்த மாநாட்டிற்கு தலைமை தாங்குவார் என சவுதி வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.