அதிகரிக்கும் கொரோனா.... இந்தியா உள்பட 20 நாடுகளின் பயணிகளுக்கு தடை... சவுதி அரேபியா அதிரடி உத்தரவு!
ரியாத்: அதிகரித்து வரும் கொரோனா காரணமாக இந்தியா உள்ளிட்ட 20 நாடுகளில் இருந்து பயணிகள் வருவதற்குத் தடை விதித்து சவுதி அரேபியா அதிரடி உத்தரவிட்டுள்ளது.
இந்தியா, இந்தோனேசியா, பாகிஸ்தான், அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், ஜப்பான் உள்ளிட்ட 20 நாடுகள் இந்த பட்டியலில் உள்ளன.
அரசுத் தரப்பில் அலுவல்ரீதியாக வரும் வெளிநாட்டு அதிகாரிகள், தூதரக அதிகாரிகள், சவுதி அரேபிய மக்கள், மருத்துவர்கள் ஆகியோருக்கு இந்த உத்தரவில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பில்லாத முதல் யூனியன் பிரதேசம்... சாதனை படைத்தது அந்தமான்!
அதிகரிக்கும் கொரோனா
சவுதி அரேபியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அங்கு கொரோனா வைரஸால் 3.68 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டனர். 6,383 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் கொரோனா பரவல் அச்சம் காரணமாக இந்தியா உள்ளிட்ட 20 நாடுகளில் இருந்து பயணிகள் வருவதற்குத் தடை விதித்து சவுதி அரேபியா அதிரடி உத்தரவிட்டுள்ளது.
இந்தியா பயணிகளுக்கு தடை
இந்தியா, இந்தோனேசியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், எகிப்து, லெபனான், துருக்கி, அமெரிக்கா, ஸ்வீடன், பிரேசில், பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்விட்சர்லாந்து, அர்ஜென்டினா, இத்தாலி, அயர்லாந்து, போர்ச்சுகல், தென் ஆப்பிரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளில் இருந்து வருவோருக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
யாருக்கெல்லாம் விலக்கு?
இந்தத் தடை உத்தரவு இன்று முதல் அமலாகிறது என்றும் அரசுத் தரப்பில் அலுவல்ரீதியாக வரும் வெளிநாட்டு அதிகாரிகள், தூதரக அதிகாரிகள், சவுதி அரேபிய மக்கள், மருத்துவர்கள் ஆகியோருக்கு இந்த உத்தரவில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும் சவுதி அரேபிய அரசு அறிவித்துள்ளது.
பாதுகாப்பு வழிகாட்டுதல் பின்பற்றனும்
சவுதி அரேபிய மக்கள், மருத்துவர்கள், அரசு உயர் அதிகாரிகள், அவர்கள் குடும்பத்தினர் யாரேனும் கடந்த 14 நாட்களுக்கு முன் தடை செய்யப்பட்ட 20 நாடுகளுக்கு சென்று வந்திருந்தாலோ அல்லது அந்த நாட்டில் விமானத்தில் இறங்கி வேறு விமானம் மாறியிருந்தாலோ அரசின் பாதுகாப்பு வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிக்க வேண்டும் என அரசு அறிவித்ததாக செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.