வேலைக்காக மட்டுமில்லை.. இனி சுற்றிப் பார்க்கவும் செல்லலாம்.. முதல்முறையாக விசா வழங்குகிறது சவுதி
சவுதி: பணிகளுக்காக மட்டுமல்ல, இனி சுற்றுலாவுக்காகவும் சவுதி அரேபியா செல்ல முடியும். 49 நாடுகளின் குடிமக்கள் சுற்றுலா பயணிகளாக தங்கள் நாட்டுக்கு வருகை தர சவுதி பச்சைக்கொடி காட்டியுள்ளது. ஆன்லைன் சுற்றுலா விசாக்களுக்கான விண்ணப்பங்கள் நாளை துவங்க உள்ளன.
கச்சா எண்ணையை மட்டுமே சார்ந்துள்ள தங்கள் பொருளாதாரத்தில், புதிதாக, பல்வேறு காரணிகளையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று அந்த நாட்டு அரசு கருதுவது, இந்த முடிவுக்கு காரணமாக சொல்லப்படுகிறது. சுற்றுலா சொர்க்கமாக தங்கள் நாட்டை மாற்றி அதன் மூலமும் வருவாயை பெருக்க, சவுதி அரேபியா, இந்த அதிரடி முடிவுக்கு வந்துள்ளது.
"சவூதி அரேபியாவை சர்வதேச சுற்றுலாப் பயணிகளுக்குத் திறந்துவிடுவது, எங்கள் நாட்டுக்கு ஒரு வரலாற்று தருணம். இங்கே யுனெஸ்கோ அங்கீகரித்த 5 உலக பாரம்பரிய இடங்கள் உள்ளன. பல கலாச்சார பொக்கிஷங்கள் உள்ளன. இதைப் பார்த்து கண்டிப்பாக சுற்றுலா பயணிகள் ஆச்சரியப்படுவார்கள்." என்று சுற்றுலாத் துறைக்கான தலைவர் அகமது அல் கட்டீப் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
49 நாடுகளின் குடிமக்களுக்கு சவுதி அரேபியா ஆன்லைன் சுற்றுலா விசாக்களுக்கான விண்ணப்பங்களை சனிக்கிழமை ஓபன் செய்கிறது.
உடை கட்டுப்பாடு
சவூதி பெண்களுக்கு பொது உடையாக இப்போதும்கூட, உடலை மூடிய அபயா அங்கி உள்ளது. அந்த ஆடையை அணியாமல் உள்நாட்டு பெண்கள் வெளியே செல்ல அனுமதி கிடையாது. ஆனால் சுற்றுலா வரும் வெளிநாட்டு பெண்களுக்கு இதுபோன்ற கடுமையான ஆடைக் கட்டுப்பாடு இருக்காது என்று கட்டீப் கூறியுள்ளார்.
அதேநேரம், வெளிநாட்டு பெண்கள் "அடக்க ஒடுக்கமான ஆடைகளை" அணிய வேண்டும் என்று தெரிவித்த கட்டீப் அது தொடர்பாக மேலும் விரிவாக பேச விரும்பவில்லை.
தற்போதைய நிலை
இதுவுரை சவுதிக்கு பணி நிமித்தமாக செல்லும் வெளிநாட்டு பணியாளர்கள், அவர்கள் சார்ந்தவர்கள் மற்றும் மெக்கா, மதீனாவுக்கு புனித யாத்திரை செல்வோருக்கு மட்டுமே, அந்த நாட்டு அரசு, விசா வழங்கி வந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் தனது எண்ணை சுத்திகரிப்பு ஆலை மீது நடைபெற்ற ட்ரோன் தாக்குதல் மற்றும், 2030க்கு பிறகு கச்சா எண்ணைக்கான உலக நாடுகளின் தேவை குறையும் என்பதை உணர்ந்து, சுற்றுலா வாயிலாகவும் வருவாயை பெருக்க சவுதி அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
கட்டுப்பாடுகள் அதிகம்
சுற்றுலாவை ஊக்கப்படுத்தும் நோக்கத்தில், விளையாட்டு மற்றும் கலாச்சார நிகழ்வுகளை பார்க்க வரும் பார்வையாளர்களுக்கு தற்காலிக விசாக்களை சவுதி அரேபியா கடந்த ஆண்டு வழங்கத் தொடங்கியது. ஆனால் ஆல்கஹால் தடை, மற்றும் கடுமையான சமூக நெறிமுறைகளைக் கொண்ட நாடு என்பதால், சர்வதேச சுற்றுலா பயணிகள் அதிக அளவுக்கு சவுதி செல்லவில்லை.
இளவரசர் நடவடிக்கை
புதிய திரையரங்குகள், இரு பாலினத்தவரும் பங்கேற்கும் இசை நிகழ்ச்சிகள் போன்றவற்றை அறிமுகம் செய்து, தங்கள் நாட்டில் நிலவும் இறுக்கமான சூழ்நிலையை குறைத்தபடி உள்ளார் சவுதி இளவரசர், முகமது பின் சல்மான்.