சவுதியில் இந்தாண்டு இதுவரை 136 பேருக்கு தலைவெட்டி மரணதண்டனை
ரியாத்: சவுதி அரேபியாவில் இந்த ஆண்டு மட்டும் 136-பேருக்கு தலையை வெட்டி மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளனர்.
சவுதி அரேபியா நாட்டில் சட்டங்கள் மிகக் கடுமையாக இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. அந்த நாட்டில் மத துவேஷம், கொலை, கற்பழிப்பு, போதைப்பொருள் கடத்தல் மற்றும் துப்பாக்கி முனையில் கொள்ளை ஆகிய கொடும் குற்றச் செயல்களுக்கு இஸ்லாமிய ஷரீஅத் சட்டங்களின்படி மரண தண்டனை விதிக்கப்படுகிறது. அதன்படி தலையை வாளால் வெட்டியே பெரும்பாலன மரண தண்டனைகள் நிறைவேற்றப்படுகிறது.
இந்நிலையில், சவுதியில் முத்திக் அல்-ஒடாய்பி என்பவர் மீது கொலை குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. விசாரணையின் முடிவில் அவருக்கு மரணதண்டணை விதிக்கப்பட்டு நேற்று தண்டனை நிறைவேற்றப்பட்டது.
இவருடன் சேர்த்து சவுதியில் இந்தாண்டு 136 பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு முழுவதும் 87 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட நிலையில், இவ்வாண்டின் 136 பேர் வரை மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது மனித உரிமை ஆர்வலர்களை கொதிப்படையச் செய்துள்ளது.
சவுதி வரலாற்றிலேயே அதிகபட்சமாக கடந்த 1995-ம் ஆண்டு 192 பேரின் தலைகளை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. தொடரும் நிலைமையை பார்த்தால் அந்த சாதனையை இந்த ஆண்டு கடந்துவிடக்கூடும் என மனித உரிமை ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.