ஈரானுக்கு எதிராக நடவடிக்கை.. தவறும்பட்சத்தில் உலக பொருளாதாரம் ஸ்தம்பிக்கும்.. சவுதி இளவரசர் வார்னிங்
Recommended Video
ரியாத்: ஈரானுக்கு எதிராக உலக நாடுகள் நடவடிக்கை எடுக்கத் தவறும்பட்சத்தில் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு கச்சா எண்ணெய் விலை உயரும். உலக பொருளாதாரம் ஸ்தம்பிக்கும் என சவுதி அரேபியாவின் இளவரசர் முகமது பின் சல்மான் தெரிவித்துள்ளார்.
சவுதி அரேபியாவில் உள்ள எண்ணெய் உற்பத்தி ஆலையில் கடந்த 14-ஆம் தேதி ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் தீவிபத்து ஏற்பட்டது. கச்சா எண்ணெய் எரிந்து நாசமானது.
இதனால் எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் கச்சா எண்ணெய் உற்பத்தியும் குறைந்துள்ளது. இதனால் கச்சா எண்ணெய்யின் விலை உயர்ந்தது. இந்த விலை உயர்வால் பெட்ரோல், டீசல் விலை உயரும் நிலை ஏற்பட்டது.
தாக்குதல்
இந்த தாக்குதலுக்கு ஈரான்தான் காரணம் என அமெரிக்காவும் சவுதியும் குற்றம்சாட்டி வருகின்றன. ஆனால் ஈரானோ, தாங்கள் தாக்குதல் நடத்தவில்லை என்றும் ஏமனில் இருந்துதான் தாக்குதல் நடத்தப்பட்டது என கூறுகிறது.
ஆரம்கோ எண்ணெய்
இந்த தாக்குதலால் ஈரான்- சவுதி இடையே பகை முற்றியுள்ளது. இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து சவுதியின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் தனியார் டிவி சேனலுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறுகையில் ஆரம்கோ எண்ணெய் ஆலை மீது தாக்குதல் நடத்திய ஈரான் மீது உலக நாடுகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எண்ணெய் விலை
அது போல் கடுமையான நடவடிக்கை எடுக்கத் தவறினால் உலக நாடுகளின் நலன்களை அச்சுறுத்தும் வகையில் பிரச்சினை பெரிதாகும். எண்ணெய் விநியோகம் பாதிக்கப்படும், விலை உயரும். இதுவரை கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு கச்சா எண்ணெய் விலை உயரும்.
ஸ்தம்பித்து போகும்
சவுதி அரேபியா உலகின் எரிசக்தி விநியோகத்தில் 30 சதவீதத்தையும், உலகளாவிய வர்த்தகத்தில் 20 சதவீதத்தையும் உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4 சதவீதத்தையும் குறிக்கிறது. விலை உயர்ந்தால் சவுதி மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த உலக நாடுகளின் பொருளாதாரமும் ஸ்தம்பித்து போகும்.
ஈரான்
இதுபோல் நடக்கக் கூடாது என உலக நாடுகள் விரும்பினால் ஈரானுக்கு எதிராக நடவடிக்கை எடுங்கள். போரை விட அரசியல் மற்றும் அமைதி வழியில் தீர்வு காண்பது என்பதே சிறப்பானதாகும் என்றார்.