மெக்கா மசூதியை தகர்க்கும் பயங்கர சதி முறியடிப்பு.. தற்கொலைப் படை தீவிரவாதி வெடித்துச் சிதறல்!
ரியாத்: முஸ்லீம்களின் புனித் தலமான மெக்காவில் உள்ள பெரிய மசூதியை தகர்க்கும் நோக்கத்துடன் பதுங்கியிருந்த தற்கொலைப் படைத் தீவிரவாதியை பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்தனர். இதையடுத்து அந்த நபர் தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தார்.
உரிய நேரத்தில் தீவிரவாதி கண்டுபிடிக்கப்பட்டதால் மிகப் பெரிய தாக்குதலை பாதுகாப்புப் படையினர் முறியடித்துள்ளனர். மெக்காவில் 2 தாக்குதல்களுக்கும், ஜெட்டாவில் ஒரு தாக்குதலுக்கும் தீவிரவாதிகள் திட்டமிட்டிருந்ததாக பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர். 3 தாக்குதல்களும் முறியடிக்கப்பட்டதாக சவூதி அரசு தகவல் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக ஒரு பெண் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாதுகாப்புப் படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த மோதலில் 5 பாதுகாப்புப் படையினர் உள்பட 11 பேர் காயமடைந்தனர்.
இந்த சம்பவம் குறித்து சவூதி உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் மன்சூர் அல் துர்க்கி கூறுகையில், மெக்காவில் 2 இடங்களிலும், ஜெட்டாவில் ஒரு இடத்திலும் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்தனர்.
மெக்காவில் உள்ள அஸ்ஸிலா என்ற பகுதியில் முதல் சதித் திடடம் முறியடிக்கப்பட்டது. 2வது சதித் திட்டம் அய்யாத் அல் மசாபியில் முறியடிக்கப்பட்டது. ஒரு தற்கொலைப்ப படைத் தீவிரவாதி மெக்காவில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கியிருந்தார். அவரைப் பிடிக்க பாதுகாப்புப் படையினர் முயற்சித்தபோது அவர் பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். பின்னர் தனது வெடிகுண்டை வெடிக்கச் செய்தார் என்றார்.
ரம்ஜான் சமயத்தில் இதுபோல நடந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.