இனி பெண்களும் ராணுவத்தில் சேரலாம்... சவுதி அரசு அதிரடி உத்தரவு
ரியாத்: சவுதி அரசு அந்நாட்டுப் பெண்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்தி வரும் நிலையில், ராணுவத்திலும் இனி பெண்கள் இணைந்து பணியாற்றலாம் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
மத்திய கிழக்குப் பகுதியிலுள்ள முக்கிய நாடுகளில் ஒன்று சவுதி அரேபியா. அந்நாட்டின் மொத்த பொருளாதாரத்தையே மாற்ற, பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதேபோல பல முக்கிய சீர்திருத்த நடவடிக்கைகளையும் அவர் எடுத்து வருகிறார்.
இந்நிலையில், சவுதி அரேபிய நாட்டிலுள்ள பெண்கள் அந்நாட்டு ராணுவத்தில் வீரர்களாகவும், கார்போரல்களாகவும், சார்ஜென்ட்களாகவும் இணைந்து பணியாற்ற அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த முடிவு கடந்த 2019ஆம் ஆண்டே எடுக்கப்பட்டிருந்த போதிலும், இப்போதுதான் இது நடைமுறைக்கு வருகிறது.
அதன்படி ராணுவத்தில் இணைந்து பணியாற்ற விரும்பும் பெண்கள் குறைந்தபட்சம் பள்ளிக் கல்வியை முடித்திருக்க வேண்டும். அதேபோல வெளிநாட்டவரை மணந்த பெண்கள் ராணுவத்தில் இணைந்து பணியாற்ற அனுமதியில்லை என்றும் சவுதி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதிகரிக்கும் கொரோனா.... இந்தியா உள்பட 20 நாடுகளின் பயணிகளுக்கு தடை... சவுதி அரேபியா அதிரடி உத்தரவு!
கடந்த சில ஆண்டுகளாகவே அந்நாட்டில் பெண்கள் பணிபுரிய அனுமதிக்கப்பட்டுள்ள துறைகள் அதிகப்படுத்தப்பட்டு வருகிறது. ஒரு புறம் அந்நாட்டிலுள்ள பெண்ணியவாதிகள் குறிவைக்கப்பட்டுள்ள நிலையிலும் மறுபுறம் பெண்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளையும் சவுதி அரசு தளர்த்தி வருகிறது.
முன்னதாக, கடந்த 2019ஆம் ஆண்டு ஆண் துணையில்லாமல் பெண்கள் வெளிநாடுகளுக்குச் செல்லலாம் என்ற உத்தரவைச் சவுதி அரசு பிறப்பித்ததது. அதேபோல 2018ஆம் ஆண்டு கார்களை ஓட்ட பெண்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.