ஏகப்பட்ட முதிர்கன்னிகள்: மஹர் பணத்திற்கு அளவு நிர்ணயித்த சவுதி ஆளுநர்
ரியாத்: சவுதியில் திருமணமாகாமல் இருக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் மக்கா ஆளுநர் இளவரசர் காலித் அல் பைசல் ஆண்கள் அளிக்கும் மஹர் தொகை அளவை ரூ. 8 லட்சத்து 68 ஆயிரமாக அதிகரித்துள்ளார்.
சவுதி அரேபியாவில் ஆண்கள் தாங்கள் திருமணம் செய்ய விரும்பும் பெண்களுக்கு நகை அல்லது பணத்தை மஹராக அளிக்க வேண்டும். சவுதி பெண்கள் அதிக அளவில் மஹர் எதிர்பார்க்கிறார்கள். இதனால் பல பெண்கள் திருமண வயதை தாண்டியும் திருமணம் ஆகாமல் உள்ளனர்.
தற்போது பெண்களுக்கு ரூ.5 லட்சத்து 21 ஆயிரம் மஹர் பணமாக அளிக்கப்படுகிறது. இந்நிலையில் இந்த தொகையை ரூ.8 லட்சத்து 68 ஆயிரமாக உயர்த்தியுள்ளார் மக்கா ஆளுநர் இளவசர் காலித் அல் பைசல். இதன் மூலம் அதிக பெண்களுக்கு திருமணம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2010ம் ஆண்டு சவுதி அரேபியாவில் 15 லட்சம் திருமணமாகாத பெண்கள் இருந்தனர். ஆனால் தற்போது 40 லட்சம் திருமணமாகாத பெண்கள் உள்ளனர் என்று ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது என இஸ்லாமிய பல்கலைக்கழக அறிஞர் அலி அல் ஜஹ்ரானி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
அதிக வரதட்சணை, திருமண செலவு, இளைஞர்களுக்கு வேலையின்மை, வீடு இல்லாதது ஆகிய காரணங்களால் அதிக பெண்கள் திருமணமாகாமல் உள்ளனர். திருமணம் நடத்தும் இடத்தின் வாடகையே ரூ.8 லட்சத்தில் இருந்து துவங்குகிறது. ஏராளமான திருமண மஹால்களை கட்டினால் அதன் வாடகை குறையும் என்றார்.