பட்டத்து இளவரசரை நீக்கிவிட்டு புதியவரை நியமித்த சவுதி மன்னர்!
ரியாத்: சவுதி மன்னர் சல்மான் தனது சகோதரரின் மகனும், உள்துறை அமைச்சருமான இளவரசர் முகமது பின் நயீபை பட்டத்து இளவசராக இன்று அறிவித்துள்ளார்.
சவுதி மன்னர் சல்மானுக்கு அடுத்தபடியாக மன்னர் பதவிக்கு வரும் வகையில் அவரது ஒன்றுவிட்ட சகோதரரான இளவரசர் முக்ரின் பின் அப்துல் அஜீஸ் பட்டத்து இளவரசர் ஆக்கப்பட்டார். இந்நிலையில் சல்மான் தனது அமைச்சரவையை இன்று மாற்றியுள்ளார். அதன்படி இளவசர் முக்ரின் பட்டத்து இளவரசர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து உள்துறை அமைச்சரும், மன்னரின் சகோதரரின் மகனுமான இளவரசர் முகமது பின் நயீப்(55) பட்டத்து இளவரசர் ஆக்கப்பட்டுள்ளார். மேலும் மன்னரின் மகன் இளவரசர் முகமது பின் சல்மான் துணை பட்டத்து இளவரசராகவும், வெளியுறவுத் துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
இளவரசர் முக்ரினின் வேண்டுகோளின்படியே அவர் அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது. 78 வயதாகும் சல்மான் தனது ஒன்றுவிட்ட சகோதரர் அப்துல்லா பின் அப்துல் அஜீஸ் கடந்த ஜனவரி மாதம் இறந்த பிறகு சவுதி மன்னர் ஆனார்.
முகமது பின் நயீப் பட்டத்து இளவரசர் ஆக்கப்பட்டதன் மூலம் முதல்முறையாக சவுதியின் நிறுவனர் மன்னர் அப்துல் அஜீஸின் மகன் அல்லாமல் பேரன் மன்னராகும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
பட்டத்து இளவரசராக்கப்பட்டுள்ள நயீப் கடந்த 1999ம் ஆண்டு துணை உள்துறை அமைச்சர் ஆக்கப்பட்டார். அவரது தந்தையும், முன்னாள் பட்டத்து இளவரசருமான நயீப் பின் அப்துல் அஜீஸ் கடந்த 2012ம் ஆண்டு இறந்த பிறகு அவர் உள்துறை அமைச்சர் ஆனார். கடந்த 2009ம் ஆண்டு அவர் அல் கொய்தா தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் இருந்து தப்பினார்.
சவுதி அரசியலில் நடந்துள்ள மிகப்பெரிய மாற்றம் இது என்பது குறிப்பிடத்தக்கது.