ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒடுக்குவது குறித்து சவுதி மன்னருடன் ஒபாமா ஆலோசனை
வாஷிங்டன்: ஈராக், சிரியாவில் மேலாதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தினரை ஒடுக்குவது தொடர்பாக சவுதி மன்னருடன் அமெரிக்கா அதிபர் ஒபாமா ஆலோசனை நடத்தினார்.
ஈராக், சிரியாவில் பல முக்கிய நகரங்களைக் கைப்பற்றியுள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கம், இஸ்லாமிய தேசம் என்ற தனிநாட்டை பிரகடனப்படுத்தியுள்ளது. அப்பகுதியில் உள்ள பிற மதத்தினர் இஸ்லாம் மதத்துக்கு மாற வேண்டும்; இல்லையென்றால் தனியே வரி செலுத்த வேண்டும் என்று கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதை ஏற்காத கிறிஸ்தவர்கள், யாஸிதிகள் போன்ற சிறுபான்மையினர் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தின் நிலைகள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
தற்போது சிரியா மீதும் வான்வழித் தாக்குதலை நடத்த இருப்பதாக ஒபாமா அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்பாக ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தினரை ஒடுக்குவது தொடர்பான வியூகங்கள் குறித்து சவுதி மன்னருடன் தொலைபேசியில் ஒபாமா ஆலோசனை நடத்தினார்.