பாகிஸ்தானுக்கு திடீர் ஐஸ் வைக்கும் சவுதி அரேபியா! செய்யப்போகும் காரியம் தெரியுமா?
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் வரலாற்றிலேயே, அந்நாட்டில் மிகஅதிகப்படியான அந்நிய முதலீடு செய்ய சவுதி அரேபியா திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டில் உள்ள டான் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
தீவிரவாத செயல்களை ஊக்குவித்து வருவதாக பாகிஸ்தான் மீது இந்தியா, ஆப்கானிஸ்தான் உள்பட அண்டை நாடுகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன. மேலும் பாகிஸ்தானில் அடிக்கடி தீவிரவாத சம்பவங்கள் அதிகரிக்கிறது. இதனால் வெளிநாட்டு முதலீடுகள் என்பது அந்நாட்டுக்கு பெரிய அளவில் இல்லை. சீனா, அமெரிக்கா உள்பட சில நாடுகளே அங்கு ஆதாயம் கருதி முதலீடுகள் செய்துள்ளன.
இந்நிலையில் சவுதி அரேபியா, பாகிஸ்தானுக்கு அந்நாட்டில் மிகப்பெரிய முதலீடு செய்ய ஒப்புக்கொண்டிருப்பதாக அந்நாட்டின் டான் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது,
பாகிஸ்தான் அமைச்சர் ஆசாத் உமர் இஸ்லாமாபாத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "பாகிஸ்தான் வரலாற்றிலேயே மிகப்பெரிய அளவில் அந்நிய முதலீடு செய்ய சவுதி அரேபியா ஒப்புக்கொண்டுள்ளது. இது தொடர்பான கோப்புகள் மத்திய அமைச்சரவை ஒப்புதலுக்காக அடுத்த வாரம் அனுப்பப்படும். அதன் பிறகு எவ்வளவு கோடி ரூபாய் முதலீடு என்பது அறிவிக்கப்படும்" என்றார்.
சவுதி பட்டத்து இளரவசர் முகமது பின் சல்மான், 'மற்றவர்கள் விரைந்து செல்ல வேண்டும்' என தங்களுக்கு தகவல் அனுப்பியிருப்பதாகவும் ஆசாத் உமர் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் பிரதமராக இம்ரான்கான் பதவியேற்ற பிறகு பயங்கரவாத சம்பவங்கள் குறைந்துவரும் நிலையில், அந்நாட்டுக்கு திடீரென சவுதி அரேபியா இவ்வளவு பெரிய ஆஃபரை அறிவித்து ஐஸ் வைப்பதுக்கு பின்னணில் ஏதேனும் மிகப்பெரிய பொருளாதார லாபம் அந்நாட்டுக்கு இருக்கும் என நம்பப்படுகிறது. எனவே உலக நாடுகள் இந்த நிகழ்வை கூர்ந்து கவனித்து வருகின்றன.