சவுதியில் இருக்கும் கணவரிடம் 'இமெயில்' மூலம் விவாகரத்து கேட்கும் அமெரிக்க பெண்
பிலடெல்பியா: அமெரிக்காவில் இருந்து குழந்தைகளுடன் சவுதிக்கு சென்றுவிட்ட கணவரிடம் பெண் ஒருவர் இமெயில் மூலம் விவாகரத்து கோரியுள்ளார்.
அமெரிக்காவைச் சேர்ந்தவர் ஜெசிகா. அவர் கடந்த 2004ம் ஆண்டு சவுதி அரேபியாவைச் சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு முகமது(9), இப்ராஹிம்(7) மற்றும் இல்யாஸ்(5) ஆகிய மூன்று மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில் ஜெசிகா அந்த நபரிடம் இருந்து விவாகரத்து கோரி கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நீதிமன்றத்தை அணுகினார். பிலெடல்பியாவில் உள்ள பெனிசில்வேனியா பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் பயின்று வந்த அந்த நபர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 24ம் தேதி குழந்தைகளை அழைத்துக் கொண்டு சவுதி அரேபியாவுக்கு சென்றுவிட்டார். அதில் இருந்து அவர் தனது மனைவி ஜெசிகாவை தொடர்பு கொள்ளவில்லை.
இதையடுத்து குழந்தைகளை கடத்தியது மற்றும் விவாகரத்து வழக்கில் ஆஜராகாதது தொடர்பாக அந்த நபருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. அந்த நபரை தொடர்பு கொள்ள முடியாததால் ஜெசிகா இமெயில் மூலம் விவாகரத்து கோரியுள்ளார். முன்னதாக அவர் நீதிமன்றத்திடம் அனுமதி பெற்று தான் இமெயில் மூலம் விவாகரத்து கோரியுள்ளார்.
இது குறித்து ஜெசிகா கூறுகையில்,
என் குழந்தைகளை என்னிடம் இருந்து பிரித்தவரின் மனைவியாக இருக்க விரும்பவில்லை என்றார்.