பத்திரிக்கையாளர் ஜமால் கொலை.. 18 ''ஹிட்மேன்களை'' விசாரிக்கும் சவுதி.. துருக்கிக்கு அதிர்ச்சி!
பத்திரிக்கையாளர் ஜமால் கசோக்கியின் கொலையில் தொடர்புடைய 18 பேரை சவுதி நாட்டு அரசே விசாரிக்க இருப்பதாக முடிவெடுத்து உள்ளது.
இஸ்தான்புல்: பத்திரிக்கையாளர் ஜமால் கசோக்கியின் கொலையில் தொடர்புடைய 18 பேரை சவுதி நாட்டு அரசே விசாரிக்க இருப்பதாக முடிவெடுத்து உள்ளது. அவர்களை நாடு கடத்தும்படி துருக்கி கோரியது நிராகரிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் வாழ்ந்து வந்த சவுதியை சேர்ந்த பிரபல பத்திரிக்கையாளர் ஜமால் கசோக்கி சவுதி அரசாங்கத்தால் கொலை செய்யப்பட்டார். இவரை கொலை செய்ததை சவுதி அரசு ஒப்புக்கொண்டு உள்ளது.
ஆனால் மேல்மட்ட அதிகாரிகள் யாருக்கும் இந்த கொலை குறித்து தெரியாது என்றுள்ளது. ஜமால் 18 பேர் கொண்ட ''ஹிட்மேன் படையால்'' கொல்லப்பட்டார் என்று கூறியுள்ளது. ஹிட்மேன் படை என்பது காசுக்காக அரசியல் கொலை செய்யும் குழுவாகும்.
கைது செய்தனர்
இந்த நிலையில் இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்டு இருக்கும் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் பலர் சவுதி அரசாங்கத்திற்கு நெருக்கமானவர்கள். இதில் சிலர் சவுதி முடி இளவரசரின் மாளிகையில் வேலை பார்த்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இப்போது கைதாகி உள்ளனர்.
என்ன விசாரணை
இந்த நிலையில் இந்த கொலை துருக்கியில் நடந்த காரணத்தால் துருக்கி தனி விசாரணை நடத்துகிறது. கொல்லப்பட்டது சவுதி பத்திரிக்கையாளர் என்பதால் சவுதி தனி விசாரணை நடத்துகிறது. இது இல்லாமல் அமெரிக்காவும் தனியாக விசாரணை நடத்தி வருகிறது. இது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
துருக்கி கோரிக்கை
இந்த நிலையில் துருக்கி தனது நாட்டில் கொலை நடந்த காரணத்தால் முக்கியமான கோரிக்கை ஒன்றை வைத்துள்ளது. ஜமாலை கொன்றவர்கள் என்று கைது செய்யப்பட்டு இருக்கும் 18 பேரையும் தங்கள் நாட்டிற்கு நாடு கடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளது. தங்கள் நாட்டில் அவர்களை விசாரிக்க வேண்டும் என்று துருக்கி கோரிக்கை வைத்துள்ளது.
விசாரிக்க உள்ளது
ஆனால் சவுதி இதற்கு மறுப்பு தெரிவித்து உள்ளது. அதன்படி யாரையும் விசாரணைக்காக வெளிநாட்டிற்கு அனுப்ப முடியாது, அவர்கள் சவுதியில் வைத்துதான் விசாரிக்கப்படுவார்கள் என்று சவுதி அரசு கூறியுள்ளது. 18 பேரையும் கண்டிப்பாக துருக்கி அனுப்ப முடியாது, ஜமால் கொலை குறித்த விசாரணையை சவுதி அரசே செய்யும் என்று கூறியுள்ளது.