சவுதி: கணவரின் வாட்ஸ்-அப் மெசேஜுக்கு பதிலளிக்காமல் நண்பருடன் சாட் செய்த மனைவிக்கு விவாகரத்து!
மனாமா: வாட்ஸ் அப்பில் கணவன் மெசேஜுக்கு பதில் அளிக்காமல் நண்பருடன் சாட் செய்து கொண்டிருந்த மனைவியை விவாகரத்து செய்துள்ளார் சவுதி கணவன்.
சவுதி நாட்டை சேர்ந்த 30 வயது ஆணுக்கு சில வருடங்கள் முன்புதான் திருமணம் முடிந்தது. ஆனால் வந்த மனைவியோ ஸ்மார்ட் போனே கதியாக இருப்பவராக இருந்துள்ளார். கணவன் வீட்டுக்கு வந்தாலும் அவருடன் நேரத்தை செலவிடாமல் போனையே வெறித்து பார்த்தபடி நண்பர்களின் மெசேஜுக்காக காத்திருப்பது அவரது வழக்கமாம். குறிப்பாக வாட்ஸ் அப்பே கதி என்று இருந்துள்ளார்.
இதனால் குழந்தைகளையும் சரிவர பேணுவது கிடையாதாம். கணவன் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் ஸ்மார்ட் போன் அடிமைத்தனத்தில் இருந்து, மனைவி மீளுவதாக இல்லை. சமீபத்தில் ஒருநாள் அலுவலகத்தில் இருந்தபடி மனைவியின் செல்போனுக்கு போன் செய்துள்ளார் அந்த கணவன். ஆனால் மனைவி போனை எடுக்கவில்லை.
இதன்பிறகு வாட்ஸ் அப்பில் ஒரு மெசேஜையும் அனுப்பியுள்ளார். அதற்கும் பதில் வரவில்லை. குழப்பமடைந்த அந்த நபர் உடனடியாக வீட்டுக்கு வந்துள்ளார். ஆனால் வீட்டில் மனைவி ஹாயாக டிவி பார்த்துக் கொண்டிருந்துள்ளார்.
தனது மெசேஜுக்கு ஏன் பதில் தரவில்லை, என்று மனைவியிடம் கேட்டதற்கு, எனது நண்பர் ஒருவருடன் சாட் செய்து கொண்டிருந்ததால் உங்கள் மெசேஜை கவனிக்கவில்லை என்று மனைவி தெரிவித்துள்ளார். கோபத்தின் உச்சிக்கே சென்ற அந்த கணவன், மனைவியை டைவர்ஸ் செய்ய கோர்ட்டில் விண்ணப்பித்தார். இதே காரணத்தை கோர்ட்டை ஏற்க செய்து டைவர்சும் பெற்றுவிட்டார்.