முன்னாள் கணவரை முட்டாள் பிசாசு என்று வாட்ஸ்அப்பில் திட்டிய பெண்ணுக்கு 3 நாள் சிறை
சவுதியில் விவகரத்தான கணவனை வாட்ஸ்அப்பில் திட்டிய மனைவியை போலீசில் புகார் கொடுத்து சிறையில் தள்ளியுள்ளார் முன்னாள் கணவர்.
சவுதி: கணவரை அடி அடி என்று அடித்து வடிவேலுவை கோவை சரளா துவைப்பது போல துவைத்து காயப்போடுகிறார்கள். அத்தனை அடியையும் வாங்கும் கணவர்கள் அமைதியாக அடுத்த வேலையை பார்க்க கிளம்பிவிடுகிறார்கள். இந்த சந்தோசமெல்லாம் நம் ஊரில்தான். சவுதியில் விவகரத்தான கணவனை வாட்ஸ்அப்பில் திட்டிய மனைவியை போலீசில் புகார் கொடுத்து சிறையில் தள்ளியுள்ளார் முன்னாள் கணவர்.
நீதிமன்றங்கள் பல விநோதமான வழக்குகளை சந்தித்துள்ளன. அப்படி ஒரு வழக்குதான் ஜெட்டா நகரில் உள்ள மேற்கு சவுதி நீதிமன்றத்திற்கு வந்தது. இளைஞர் ஒருவர் வாட்ஸ் அப் மெசேஜ் உடன் கோர்ட் படியேறி வழக்குத் தொடர்ந்துள்ளார். அந்த நபரின் முன்னாள் மனைவிக்கும் அவருக்கும் ஏற்பட்ட பிரச்சினைதான். கோர்ட் படியேற காரணமாக அமைந்துள்ளது.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு விவாகரத்து செய்யப்பட்ட முன்னாள் மனைவி கடுமையாக திட்டி வாட்ஸ் அப் செய்துள்ளார். அதனை படிக்க படிக்க அவருக்கு மன உளைச்சல் அதிகமாகி விட்டது. அந்த பெண் பயன்படுத்தியிருந்த கடுமையான வார்த்தைகள் அந்த நபரை தூங்க விடாமல் செய்தன. வார்த்தைக்கு வார்த்தை 'முட்டாள்' என்றும் 'பிசாசு' என்றும் மெசேஜ் செய்திருந்தார்.
இவளை ஏதாவது செய்தாக வேண்டுமே என்று யோசித்த அவர், முன்னாள் மனைவி மீது வழக்குக் தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, பிரிந்து சென்ற கணவனை கடுமையாக திட்டிய மனைவிக்கு மூன்று நாட்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். இனிமே இது போல திட்டி மெசேஜ் அனுப்பக் கூடாது என்றும் அந்த பெண்ணை நீதிபதி எச்சரித்திருக்கிறார்.
நம் ஊரில் முன்னாள் கணவர்களோ... இந்நாள் கணவர்களோ யாராக இருந்தாலும் மனைவி கடுமையாக அடித்தால் கூட எதையும் தாங்கும் இதயமாக எதிர்கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.