மரண பயம் காட்டிய அந்த 10 நிமிடங்கள்.. பாரீஸ் இசை அரங்கத்திற்குள் நடந்தது என்ன?
பாரீஸ்: தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி கொத்து கொத்தாக கொலை செய்த மியூசிக் ஹாலுக்கு நடந்தது என்ன என்பது குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. தீவிரவாதிகள் தாக்குதலில் உயிர் பிழைத்தவர்கள் உடல் நடுக்கத்தோடு, தாங்கள் நேரில் கண்டவற்றை கூறியுள்ளனர்.
பாரீசிலுள்ள புகழ்பெற்ற இசை ஹால், படாக்ளான். 150 வருடம் பழமையானது. அங்கு, அமெரிக்க குழுவினரின் ஈகிள்ஸ் ஆப் டெத் மெடல்' என்ற இசை நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்தது.
1500 பேர் ஒரே நேரத்தில் நிகழ்ச்சியை கண்டுகளிக்கும் வகையிலான அந்த ஹாலில், இந்த நிகழ்ச்சிக்கான அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்து ஹவுஸ்-ஃபுல் போர்டு வெளியே மிளிர்ந்தது.
இசை நிகழ்ச்சி ஆரம்பித்து, உச்ச ஸ்தாபியில் சென்றபோதுதான், எதிர்பார்க்காத அந்த சம்பவம் நடந்தது. திடீரென 4 வாலிபர்கள், கையில் ஏகே-47 ரக துப்பாக்கிகளோடு உள்ளே புகுந்தனர். "அல்லாகு அக்பர்" என்று சத்தம் போட்டுக்கொண்டே, தங்கள் துப்பாக்கிகளை பார்வையாளர்களை நோக்கி திருப்பி சரமாரியாக சுட்டு தள்ளினர்.
அதேநேரம், தங்கள் கைகளில் வைத்திருந்த கிரேனைட் குண்டுகளையும், இரக்கமேயின்றி பார்வையாளர்கள் மீது வீசினர். கண் இமைக்கும் நேரத்தில் இவையெல்லாம் நடந்தன. குண்டுகளுக்கும், வெடிகுண்டுகளுக்கும் இரையாகிய மக்கள், உடலில் இருந்து ரத்தம், சதை தெறித்து அந்த அரங்கில் ரொட்டி துண்டுகள் போல சிதறியது.
அச்சத்தால் உடல்நடுங்கிய பல மக்கள், சேர்களின் அடியில் பதுங்கினர். சிலர், சுவரை ஏறி குதித்தனர். மேடையில் நின்ற, இசை நிகழ்ச்சி நடத்திய குழுவினர் அலறியடித்து ஓடினர்.
ஹாலுக்குள் சிக்கி பிழைத்த பியார்ஸ் என்பவர் கூறுகையில், "அந்த தாக்குதல் 10 நிமிடங்கள் நீடித்தது. வாழ்க்கையின் மரண நிமிடங்கள் அவை. அனைவரும் சேருக்கு அடியில் பதுங்கினோம். ஆனால், தீவிரவாதிகளிடம் எந்த பதற்றமும் இல்லை. குண்டுகள் தீர்ந்த பிறகும், 3 முறை லோடு செய்து எங்களை நோக்கி சுட்டனர்" என்று கூறியுள்ளார்.