14 வயது சிறுமியை 3 மணி நேரம் அடித்த பெண்கள் - சீனாவில் பரிதாபம்!
பீஜிங்: சீனாவின் நான்சாங் நகரின் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றின் மொட்டை மாடியில் கிட்டதட்ட மூன்று மணி நேரத்துக்கு ஒரு சிறுமி தாக்கப்பட்ட சம்பவம் இங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 25 ஆம் தேதி, நடந்த இச்சம்பவம் வீடியோ பதிவு செய்யப்பட்டு சமூக தளங்களில் வெளியாகி சீனா முழுவதும் வைரலாகியுள்ளது. சுமார் ஆறு பெண்கள் சேர்ந்து இந்த வீடியோவில் லீ க்ஸியான் என்ற 14 வயது பெண்ணை 3 மணி நேரம் கடுமையான வார்த்தைகளால் திட்டியும், அடித்தும் காயம் ஏற்படுத்தியுள்ளனர். அவர்களில் ஒரு பெண் வெறும் 99 நொடிகளில் லீயை சுமார் 32 முறை அறைந்துள்ளார்.
அவளது தலைமுடியை இழுத்து பிடித்து, அவரை ஓங்கி உதைக்கும் போதுகூட லீ அந்தப் பெண்களை எதிர்த்து எதுவும் செய்யவில்லை. இந்தச் சம்பவத்தால் முகம் வீங்கி, மூக்கில் ரத்தம் வர, லீ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். லீ தமது பெயரைச் சொல்லி அழைத்ததாகக் குற்றம்சாட்டிய அந்தப் பெண்கள் இப்படியொரு தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது.
இந்த வீடியோ வைரல் ஆனதால் லீயைக் கண்டறிந்த போலீசார் இது தொடர்பான விசாரணையில் தற்போது ஈடுபட்டள்ளனர். எனினும், லீயைத் தாக்கிய யாரும் இதுவரைக் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.