ஷூமாக்கரிடம் பேசிப் பேசி அவரை கோமாவில் இருந்து எழுப்ப முயலும் மனைவி
பாரிஸ்: பார்முலா ஒன் கார் பந்தய வீரர் மைக்கேல் ஷூமாக்கரை கோமாவில் இருந்து எழுப்ப அவரிடம் அவரது மனைவி தினமும் பேசி வருகிறாராம்.
பார்முலா ஒன் கார் பந்தய வீரரான மைக்கேல் ஷூமாக்கர் கடந்த டிசம்பர் மாதம் 29ம் தேதி பிரான்ஸில் தனது மகனுடன் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது விபத்து ஏற்பட்டது. தலையில் பலத்த காயம் அடைந்த அவர் பிரான்ஸில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார்.
அறுவை சிகிச்சை
தலையில் படுகாயம் அடைந்த ஷூமாக்கருக்கு மூளையில் 2 அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன. இதையடுத்து டாக்டர்கள் அவரை கோமாவில் வைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
உடல் அசைவு
கோமாவில் இருக்கும் ஷூமாக்கரின் உடலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அசைவுகள் இருந்ததாக ஊடகங்களில் செய்தி வந்தன. இதை ஷூமாக்கரின் உதவியாளர் ஏற்கவும் இல்லை, மறுக்கவும் இல்லை.
மயக்க மருந்து
ஷூமாக்கருக்கு அளிக்கப்பட்டு வரும் மயக்க மருந்தின் அளவை டாக்டர்கள் படிப்படியாக குறைத்து வருகின்றனர். இருப்பினும் அவரிடம் ஒரு மாற்றமும் இல்லை.
பேசிப் பேசி
இந்நிலையில் ஷூமாக்கரின் மனைவி அவர் அருகே அமர்ந்து மணிக்கணக்கில் அவரிடம் பேசி வருகிறாராம். அவரை இப்படி பேசிப் பேசியாவது கோமாவில் இருந்து வெளிக்கொண்டு வர அவர் முயற்சி செய்து வருகிறார்.
எச்சரிக்கை
படுகாயம் அடைந்த ஷூமாக்கரை அதற்குள் கோமாவில் இருந்து எழுப்ப முயல்வது சரியில்லை என்று சில நிபுணர்கள் எச்சரித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.