பொன்னோவியமாக ஜொலித்த தென்னிந்தியா.. ராமேஸ்வரம் கடலை விண்ணிலிருந்து 'ஷூட்' செய்த வீரர்!
வாஷிங்டன்: சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து ராமேஸ்வரத்தின் நீலக்கடல் அழகை ஒரு ஓவியம் போல் அழகாக பதிவு செய்துள்ளார் விண்வெளி வீரரான ஸ்காட் கெல்லி.
அமெரிக்கக் கடற்படையிலிருந்து ஓய்வு பெற்ற பொறியாளர் ஸ்காட் கெல்லி (51). இவர் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் விண்வெளி வீரராக தங்கியிருந்து பல்வேறு ஆய்வுகள் நடத்தி வருகிறார்.
கடந்த மார்ச் முதல் வாரத்திலிருந்து தொடர்ச்சியாக ஒரு வருட காலம் ஆராய்ச்சிக்காக அங்கு தங்கியுள்ள ஸ்காட், வருகிற மார்ச் மாதம் 3ம் தேதி தனது ஆய்வுகளை முடித்து விட்டு பூமிக்கு திரும்புகிறார்.
|
விதவிதமான புகைப்படங்கள்...
அவ்வப்போது அங்கிருந்தபடி பூமியின் அழகை வண்ணப் புகைப்படங்களாக பதிவு செய்து தனது டிவிட்டர் மற்றும் பேஸ்புக் பக்கங்களில் பதிவேற்றம் செய்து வருகிறார் ஸ்காட். வித்தியாசமான கோணத்தில் இவரது புகைப்படங்கள் அமைந்திருக்கும்.
|
தென் இந்தியா...
இந்நிலையில், புத்தாண்டு பிறந்துள்ள நிலையில் ஸ்காட் இந்தியாவின் தென் பகுதிகளை புகைப்படங்களாக எடுத்துள்ளார். அதில், மன்னார் வளைகுடா கடல், பாக் ஜலசந்தி கடல், பாம்பன் பாலம், ராமேசுவரம் தீவு, குருசடைத் தீவு, மண்டபம் ஆகிய பகுதிகள் அடக்கம்.
|
நீலக்கடல்...
தனது இந்த புகைப்படத்தொகுப்பிற்கு 'இந்தியாவின் தெற்கு முனையும் அதன் நீலக் கடலும்' என்று ஸ்காட் தலைப்பிட்டுள்ளார். தனது பேஸ்புக் மற்றும் டிவிட்டர் பக்கங்களில் ஸ்காட் பகிர்ந்த இந்தப் படங்களுக்கு ஆயிரக்கணக்கில் லைக்குகளை குவித்து வருகிறது.
ராமேஸ்வரம்...
அதில், ஒரு புகைப்படத்தில் ராமேஸ்வரத்தின் நீலக்கடல் அழகாக ஓவியம் போல் காட்சி தருகிறது. "The Southern tip of #India and its blue waters. #YearInSpace" என்ற கருத்துடன் நேற்று அதிகாலை 2.18 மணிக்கு இந்தப் புகைப்படத்தை அவர் பதிவிட்டுள்ளார்.
வைரல்...
இந்தப் புகைப்படத்திற்கு மட்டும் இதுவரை 10 ஆயிரத்திற்கும் அதிகமான லைக்குகள் கிடைத்துள்ளது. இணையத்தில் வைரலாக இந்தப் புகைப்படம் பரவி வருகிறது.
சாதனை வீரர்...
383 நாட்கள் விண்வெளியில் தங்கியிருந்த ஒரே வீரர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஸ்காட். கடந்தாண்டு அக்டோபர் மாதம் 16ம் தேதி இவர் இந்தச் சாதனையைப் புரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.