அரசியல் சாசன பிரிவு 370 ரத்து- ஐநா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்துக்கு எதிரானது: பாகிஸ்தான்
இஸ்லாமாபாத்: ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டது ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானத்துக்கு எதிரானது என்கிறது பாகிஸ்தான்.
இது தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
ஜம்மு காஷ்மீர் விவகாரம் என்பது சர்ச்சைக்குரிய ஒன்று. இதில் இந்திய அரசு மட்டும் தன்னிச்சையாக எந்த முடிவும் எடுக்க முடியாது. இதைத்தான் ஐநா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானமும் சுட்டிக்காட்டுகிறது.
ஜம்மு காஷ்மீர் பிரச்சனை என்பது சர்வதேச விவகாரம். ஆகையால் அனைத்துவிதமான சட்ட ரீதியான நடவடிக்கைகளையும் பாகிஸ்தான் மேற்கொள்ளும்.
இவ்வாறு பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமித்ஷா அதிரடி
இன்று ராஜ்யசபாவில் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது பிரிவை ரத்து செய்யும் தீர்மானத்தை உள்துறை அமைச்சர் அமித்ஷா அதிரடியாக தாக்கல் செய்தார். அத்துடன் ஜம்மு காஷ்மீர் மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளன.
ஜம்மு காஷ்மீர், சட்டசபையுடன் கூடிய தனி யூனியன் பிரதேசமாகவும் லடாக் மாவட்டம் சட்டசபை இல்லாத தனி யூனியன் பிரதேசமாகவும் மாற்றப்படும் என்றும் அமித்ஷா அறிவித்துள்ளார். இதற்குத்தான்ன் பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.