பருவநிலை மாற்றத்தால் அடுத்த 100 ஆண்டுகளில் கடல் மட்டம் உயரும்: நாசா எச்சரிக்கை
நியூயார்க்: பருவநிலை மாற்றம் காரணமாக அடுத்த 100 ஆண்டுகளில் பூமியில் உள்ள கடல் நீர்மட்டத்தின் அளவு மூன்று அடி உயரும் என நாசா ஆய்வில் தெரிய வந்துள்ளது.
உலகின் மிக முக்கியமான சுற்றுச்சூழல் பிரச்சினையாக பருவநிலை மாற்றம் உள்ளது. காடுகளை அழித்து இயற்கையை சீர்குலைக்கும் மனிதர்களால் பூமிக்கு ஆபத்து என விஞ்ஞானிகள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர்.
இந்நிலையில், அடுத்த 100 அல்லது 200 ஆண்டுகளில் பூமியில் உள்ள கடல் மட்டத்தின் அளவு மூன்று அடி உயரும் என நாசா ஆய்வு கூறுகின்றது. மேலும், இந்த கடல் மட்ட உயர்வு தடுக்க முடியாதது என்றும், அது எவ்வளவு விரைவாக நடைபெறும் என்பதை உறுதி செய்ய முடியாது என்றும் அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
வெப்பம் அதிகரிப்பு...
இதுகுறித்து கொலராடோ பல்கலைக்கழக பேராசிரியரும், இந்த ஆய்வுக்குத் தலைவராகவும் விளங்கும் ஸ்டீவ் நெரெம் கூறுகையில், "கடலில் வெப்பம் அதிகரிப்பதாலும், பனிப் பாறைகள் உருகி கடலில் கலப்பதாலும் கடல் மட்டம் உயர்ந்து வருகிறது.
கடல் நீர்மட்டம் உயரும்...
இதனால் கடல் மட்டத்தின் அளவு மூன்று அடியாக அல்லது அதற்கும் மேலாக உயரலாம் என்பது நிதர்சனமான உண்மை. ஆனால் அது இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் நிகழுமா அல்லது சிறிது காலம் கழித்து நிகழுமா என்பதை அறுதியிட்டுச் சொல்ல முடியாது" எனத் தெரிவித்துள்ளார்.
ஆய்வு...
கடந்த 2013ம் ஆண்டு பருவநிலை மாற்றத்துக்கான ஐக்கிய நாடு அரசுகளின் குழு கடல் மட்டம் உயர்வு குறித்து ஆய்வு நடத்தியது. அதில், இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் கடல் மட்டத்தின் அளவு ஒரு அடியில் இருந்து மூன்று அடியாக உயரலாம் என்று கூறப்பட்டிருந்தது.
பனிப் பாறைகள்...
கிரீன்லாந்து பகுதியில் ஆண்டுக்கு சராசரியாக 303 கிகாடன் பனிப் பாறைகள் உருகி கடலில் கலக்கின்றன. அதேபோல அண்டார்டிக் பகுதியில் ஓர் ஆண்டுக்கு 118 கிகாடன் பனிப் பாறைகள் உருகியுள்ளன.
உயர்ந்துள்ளது...
இதன் காரணமாக 1992ம் ஆண்டில் இருந்து உலகளாவிய கடல் மட்டத்தின் அளவு மூன்று அங்குலமாகவும் (7.6 செமீ), சில பகுதிகளில் ஒன்பது அங்குலமாகவும் (23 செமீ) உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.