பறையிசை முழக்கத்துடன் தைப்பூசம் கொண்டாடிய சியாட்டல் தமிழர்கள்!
சியாட்டல்(யு.எஸ்): அமெரிக்க வடமேற்கு கரையோர சியாட்டல் நகரில் ரெட்மண்ட் மற்றும் பாத்தல் கோவில்களில் தமிழர்களின் பறையிசை முழங்க தைப்பூசம் கொண்டாடப்பட்டது.
சியாட்டல் கிராமியக் கலைக்குழு (Seattle Tamil Arts of Rhythm - STAR) என்ற பெயரில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள அரசு அங்கீகாரம் பெற்ற லாப நோக்கமற்ற அமைப்பு முதலில் பறையிசையை அங்கே அரங்கேற்றியுள்ளனர்.
STAR கலைக்குழு என அழைக்கப்படும் இந்த குழுவினர் ஒரே நாளில் ரெட்மண்ட் வேதா கோவிலிலும் பாத்தல் இந்து கோவிலிலும் நடைபெற்ற தைப் பூச நிகழ்ச்சியில் பறை இசைத்து நடனமாடினர். சிறுவர் முதல் பெரியவர்கள் வரை காவடி சுமந்து வர, உடன் பறையிசையும் கலந்து வந்த போது அங்கே பக்தி பரவசத்துடன் தமிழ் மணமும் ஒருங்கே கலந்து வீசியது எனலாம்.
அமெரிக்காவில் பறையிசையின் முன்னோடியாக விளங்கும் செயிண்ட் லூயிஸ் நகர ‘அமெரிக்கன் பறை இசைக் குழுவினருடன்' தொடர்பு கொண்டு பல யுத்திகளை தெரிந்து கொண்டதாக கூறுகிறார்கள். மேலும் பல யூ டியூப் வீடியோக்களைப் பார்த்து சுயமாகவே இக்குழுவினர் பறையிசையை பயின்றுள்ளனர்.
பறையிசை மட்டுமல்லாமல் , தமிழர்களின் மற்ற கலைகளான ஒயிலாட்டம், கரகாட்டம், பொய்க்கால் குதிரை என அனைத்து வித கலைகளையும் அமெரிக்க மண்ணில் அரங்கேற்றுவதே தங்கள் இலக்கு என்று STAR கலைக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.
-இர தினகர்