மும்பை தாக்குதல் தீவிரவாதி லக்வியை மீண்டும் கைது செய்தது பாகிஸ்தான்!
இஸ்லாமாபாத்: மும்பை தாக்குதல் சம்பவத்துக்குக் காரணமான முக்கிய தீவிரவாதி லக்வியை பாகிஸ்தான் மீண்டும் கைது செய்துள்ளது.
2008ஆம் ஆண்டு மும்பையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலில் 166 பேர் பலியாகினர். இத்தாக்குதலை நடத்தியவர்களில் அஜ்மல் கசாப் மட்டும் சிக்கினான். அவனுக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
இதனிடையே இந்தியாவின் கடுமையான நெருக்கடியால் பாகிஸ்தானிலும் மும்பை தாக்குதல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இத்தாக்குதலை நடத்தியதில் மூளையாக செயல்பட்ட லஷ்கர் இ தொய்பா தளபதி ஷகி உர் ரஹ்மான் லக்வி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தான்.
அண்மையில் பெஷாவர் நகரில் பள்ளிக் குழந்தைகள் மீது தலிபான்கள் கொடூரத் தாக்குதல் நடத்திய நிலையில் லக்வியை திடீரென பாகிஸ்தான் நீதிமன்றம் ஜாமீனில் விடுதலை செய்தது. தலிபான்களுக்கு எதிராக லஷ்கர் இ தொய்பாவை களமிறக்கும் நோக்கத்துடன் லக்வி சிறையில் விடுவிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.
ஆனால் இதற்கு இந்தியா மிகக் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தது. இதனால் ஜாமீனில் வெளிவந்த லக்வியை பாகிஸ்தான் பொது ஒழுங்கு பராமரிப்பு பிரிவின் கீழ் கைது செய்து தடுத்து வைத்தது. இதனை எதிர்த்து லக்வி இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இவ்வழக்கை விசாரித்த இஸ்லாமாபாத் நீதிமன்றம் நேற்று லக்வியை தடுத்து வைப்பதற்கு இடைக்காலத் தடை விதித்தது. இதற்கும் இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
இந்நிலையில் அன்வர் என்பவரை கடத்தியதாக ஒரு வழக்குப் பதிவு செய்தது லக்வியை மீண்டும் பாகிஸ்தான் கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்ட லக்வி நேற்று இரவு முழுவதும் கோல்ரா காவல்நிலையத்தில் வைக்கப்பட்டிருந்ததாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.