மருத்துவரை அடிக்கடி மாற்றினால் மரணிக்க வாய்ப்புகள் அதிகம் - ஆய்வு
ஒரே மருத்துவரிடம் தொடர்ந்து சென்று சிகிச்சை பெறுகின்ற நோயாளிகளிள் இறப்பு விகிதம் மிகவும் குறைவு என்று ஒரு ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது.
இவ்வாறு செய்வதால் கிடைக்கின்ற நன்மைகள் பொது மற்றும் சிறப்பு மருத்துவர்களுக்கு பொருந்துகின்றன.
இந்த நன்மைகள் வேறுபட்ட கலாசாரம் மற்றும் சுகாதார அமைப்புக்களை சேர்ந்த மக்களுக்கும் கிடைப்பதும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
மருத்துவ நடைமுறையின் மனித அம்சம் "உயிர் காக்கும்" சாத்தியமே. ஆனால், இது புறக்கணிக்கப்பட்டுள்ளது என்று எக்ஸிட்டர் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
நோயாளிகள் தங்கள் சொந்த மருத்துவரைப் பார்ப்பதே மதிப்புமிக்கது என்பதை இந்த ஆய்வின் மூலம் உணர்ந்துள்ளதாக முன்னோடிப் பொது மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதிக பணி சுமை அழுத்தங்களால் அந்த குறிப்பிட்ட மருத்துவரைப் பார்ப்பதற்கு அதிக காலம் காத்திருக்க நேரலாம் என்று பொதுமருத்துவர்களுக்கான ராயல் கல்லூரியைச் சேர்ந்தவர்கள் குறிப்பிட்டனர்.
தீவிர நோய், நீணடகால மன நல பிரச்சனைகள் மற்றும் சிக்கலான மருத்துவ சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்கு மருத்துவ கண்காணிப்பும் பராமரிப்பும் தொடர்ச்சியாக ஒரே மருத்துவர் மூலம் வழங்கப்படுவது சிறந்த பயனளிக்கும் என்பது தெரிந்த விடயமே.
பிஎம்ஜே ஓபன் இதழில் வெளியான இந்த ஆய்வு, இங்கிலாந்து, பிரான்ஸ், அமெரிக்கா, கனடா மற்றும் தென் கொரியா உள்ளிட்ட 9 நாடுகளிலிருந்து 22 ஆய்வு முடிவுகளை பகுப்பாய்வு செய்துள்ளது.
பிற நோயாளிகளோடு ஒப்பிட்டு பார்த்தால், இந்த ஆய்வுக் காலத்தில், சராசரியாக இரண்டாண்டுகள் ஒரே மருத்துவரிடம் சிகிச்சை பெற்று வந்தவர்களிடம் இறப்பு விகிதம் குறைவாக இருப்பது தெரிய வந்துள்ளது.
மருத்துவப் பராமரிப்பு தொடர்ந்து ஒரே மருத்துவரால் கொடுக்கப்படுவது சிறந்தது என்றும், இதற்கு சுகாதார பராமரிப்பு திட்டத்தில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
சிறந்த தகவல் தொடர்பு
நோயாளிகளும், மருத்துவரும் அடிக்கடி சந்தித்து, ஒருவரையொருவர் அதிகமாக அறிந்துகொள்ளும்போதுதான் தொடர்ச்சியான மருத்துவ பராமரிப்பு கிடைக்கிறது என்று எக்ஸ்ட்டர் மருத்துவ கல்லூரியின் பேராசிரியர் பிலிப் இவான்ஸ் கூறியிருக்கிறார்.
"இந்த நடைமுறை சிறந்த தகவல் தொடர்பை உருவாக்குவதற்கும், நோயாளிகளுக்கு திருப்தி அளிப்பதற்கும், மருத்துவ ஆலோசனைகளை பின்பற்றுவதற்கு அவர்களை வழிநடத்துவதற்கும், மிக முக்கியமாக மருத்துவமனை சேவைகளை குறைத்துவிடவும் பயன்படுகிறது" என்று அவர் கூறியுள்ளார்.
இந்த ஆய்வில் ஈடுபட்டவரும், எக்ஸ்ட்டரிலுள்ள புனித லியோனார்டில் பொது மருத்துவருமான சர் டெனிஸ் பெரேரா கிரே, எந்த மருத்துவரை சந்திக்கிறோம், அவர்களோடு எவ்வளவு சிறந்த முறையில் நோய் பற்றிய தகவல்களை பறிமாறிக் கொள்கிறோம் என்பது நோயாளிகள் நீண்ட காலமாக அறிந்திருக்கும் விடயம் என்று கூறியுள்ளார்.
"இதுவரை, நோயாளிகள் அவர்களுக்கு விருப்பமான மருத்துவரைப் பார்ப்பதற்கு ஏற்பாடு செய்வது வசதியான அல்லது மரியாதைக்குரிய விடயமாக உள்ளது" என்று அவர் தெரிவித்திருக்கிறார்.
தரமான மருத்துவப் பராமரிப்பு எது என்பதும், இதுவே உண்மையிலேயே வாழ்வா சாவா என்ற விடயம் என்பதும் இந்த ஆய்வில் தெளிவாகியுள்ளது என்று அவர் கூறியுள்ளார்,
குழு முயற்சி
பல அணுகுமுறைகளைக் கையாளும் பல சிகிச்சை முறைகள் சோதித்துப் பார்க்கப்படுவதாக பொது மருத்துவர்களுக்கான ராயல் மருத்துவ கல்லூரியின் துணைத் தலைவர் பேராசிரியர் கமிலா ஹௌத்துரோன் கூறியுள்ளார்.
நோயாளிகளின் பதிவேடுகளை பார்க்கும், அவர்களோடு நல்லுறவை ஏற்படுத்திக் கொள்கிற ஒரு பொது மருத்துவர் உள்ளிட்ட, சுகாதார பராமரிப்பு நிபுணர்களின் குழு ஒன்றிடம் நோயாளி ஒப்படைக்கப்படுவது அவற்றில் ஒரு அணுகுமுறை.
பொது மருத்துவ சேவைகளை சரியான நேரத்தில் சமச்சீராக தொடர்ச்சியாக வழங்குவது, பெரும் சவாலாக உள்ளது. அதிக பொது மருத்துவர்கள் மற்றும் இந்த தொழிலுக்கு மேலதிக மனித வளங்கள் தேவை என்பதுதான் கடைசியில் இதற்கான தீர்வாக அமையும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஷாம்பு பாட்டிலை உயிர்காக்கும் சாதனமாக மாற்றிய மருத்துவர்
பிற செய்திகள்:
- அமெரிக்கா: 200 முறைக்கு மேல் தோற்கடிக்கப்பட்ட 'கும்பல் கொலை' எதிர்ப்பு மசோதா
- குடியேற்ற கொள்கை: டிரம்ப் நிர்வாகத்துக்கு எதிராக வலுக்கும் போராட்டம்
- 2018 உலகக்கோப்பை: அர்ஜென்டினாவை பிரான்ஸ் வெளியேற்றியது எப்படி?
- சுவிஸ் வங்கியில் இருந்து பணத்தை மீட்டு ஏழைகளுக்கு வழங்கும் நைஜீரியா