உதட்டைக் குவிச்சு, தலையை சாய்த்து செல்பி எடுப்பவரா... அப்போ நீங்க ‘அந்த’ மாதிரியாம் பாஸ்!
சிங்கப்பூர்: செல்பிக்கள் மூலம் ஒருவரது குணநலன்களையும், அவரது தற்போதைய மனநிலையையும் அறிந்து கொள்ள இயலும் என ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.
கையில் செல்போனுடன் ‘செல்பி புள்ளைகளாக' வலம் வருகின்றனர் மக்கள். அதிலும், விதவிதமான முக பாவனைகளோடு செல்பி எடுத்து அதகளப்படுத்தி விடுகிறார்கள்.
செல்பி எடுப்பது மன நோயா என ஆய்வுகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் செல்பி மூலம் அதை எடுப்பவரின் மனநிலையை, குணநலன்களைத் தெரிந்து கொள்ள முடியும் என தெரிய வந்துள்ளது.
சிங்கப்பூரை சேர்ந்த நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வில் இது தெரிய வந்துள்ளது.
உதடுகளை குவித்து செல்பி...
செல்பியில் உங்கள் உதடுகளை குவித்துக்கொண்டு போஸ் கொடுத்திருந்தால், நீங்கள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாதவராகவும், மனம் தொடர்பான பிரச்சனைகளை கொண்டவராகவும் இருக்கலாம் என இந்த ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.
உங்களைப் பற்றிய விபரங்கள்...
அதேபோல், செல்பியை பகிரும்போது உங்கள் இருப்பிடத்தை குறிப்பிடாவிட்டால் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றிய விபரங்களை பொதுவெளியில் வெளியிட விரும்பவில்லை என்று அர்த்தமாம்.
இனிமையானவர்...
கேமராவை தாழ்த்தி (லோ அங்கிள்) வைத்தப்படி செல்பி எடுக்கப்பட்டிருந்தால் அவர் பழகுவதற்கு இனிமையானவர் என்கிறது இந்த ஆய்வு.
தன்னம்பிக்கை மனிதர்...
செல்பியில் சிரித்தப்படி இருந்தால் நீங்கள் புதிய அனுபவங்களை தேடுபவர் என்று அர்த்தம் என்றும், கேமராவை நேரடியாக பார்த்தால் நீங்கள் அதிக தன்னம்பிக்கை கொண்டவர் என்று பொருள் என்கிறது இந்த ஆய்வு முடிவு.