உங்க சங்காத்தமே வேணாம்.. சர்வதேச நீதிமன்றத்தில் பாகிஸ்தான் அதிகாரிகளுக்கு கைகுலுக்க மறுத்த இந்தியா!
தி ஹேக்: சர்வதேச நீதிமன்றத்தில் பாகிஸ்தான் அதிகாரிகள் கை குலுக்கிய போது அதை ஏற்க மறுத்த இந்திய அதிகாரிகள் இரு கைகளையும் கூப்பி வணக்கம் சொன்ன காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் புல்வாமா மாவட்டத்தில் ஜெய்ஷ் இ முகமது என்ற தீவிரவாத அமைப்பை சேர்ந்த ஆதில் அகமது தார் என்ற 19 வயது இளைஞர் காரில் வெடிப்பொருட்களை ஏற்றிக் கொண்டு சிஆர்பிஎஃப் வீரர்களின் வாகனத்தின் மீது மோதினார்.
இதில் 40 வீரர்கள் மரணமடைந்தனர். இதனால் பாகிஸ்தான் மீது இந்தியா கடும் கோபத்தில் உள்ளது.
உளவு
இந்த நிலையில் பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்ட இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷன் ஜாதவுக்கு ராணுவ கோர்ட் மரண தண்டனை விதித்தது.
இந்தியா மனு
அவருக்கு தூதரக உதவிகள் தொடர்ந்து மறுக்கப்பட்ட நிலையில், மரண தண்டனையை ரத்து செய்யக்கோரி நெதர்லாந்தின் தி ஹேக் நகரில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா மனு தாக்கல் செய்தது.
கை குலுக்கல்
அந்த மனு மீதான விசாரணை இன்று தி ஹேக்கில் நடைபெற்றது. இந்த வழக்கின் வாதங்களை முன்வைத்த போது பாகிஸ்தானின் அட்டார்னி ஜெனரல் அன்வார் மன்சூர் கான் அங்கு அமர்ந்திருந்த இந்திய வெளியுறவு துறை செயலாளர் தீபக் மீட்டல் மற்றும் நெதர்லாந்துக்கான இந்திய தூதர் வேணு ராஜாமணி ஆகியோருக்கு கை குலுக்கினார்.
வைரல்
அப்போது அவருக்கு இருவரும் கைகுலுக்கவில்லை. மாறாக இரு கைகளை கூப்பி வணக்கம் என தெரிவித்தனர். இதன் மூலம் இரு தரப்பு உறவுகளும் நீடிப்பது கடினம் என்பதையே காட்டுகிறது. இந்த புகைப்படமும் வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
|
முன்பு ஒரு முறையும்
இது போல் பாகிஸ்தான் அதிகாரிகளை இந்திய அதிகாரிகள் அவமானப்படுத்துவது முதல் முறையல்ல. கடந்த 2017-ஆம் ஆண்டு இத் குல்பூஷன் யாதவ் வழக்கின் போது சர்வதேச நீதிமன்றத்தில் தெற்காசிய மற்றும் சார்க் அமைப்பின் பாகிஸ்தானுக்கான இயக்குநர் முகமது ஃபைசல் கை குலுக்கிய போதும் தீபக் மிட்டல் கை கொடுக்காமல் வணக்கம் என கைகளை கூப்பி கூறியது குறிப்பிடத்தக்கது.