நீயும் நானுமா... ஸ்கூல் நண்பனை திருடனாய்ப் பார்த்து ஷாக்கான பெண் நீதிபதி
மியாமி: அமெரிக்காவில் குற்றவாளி ஒருவரிடம் விசாரணை நடத்தி தண்டனை கொடுத்த நீதிபதி, பின்னர்தான் அந்த குற்றவாளி தனது பால்ய கால நண்பன் என்று தெரிய வந்து அதிர்ச்சி அடைந்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இருவரும் கோர்ட்டில் நீதிபதி, குற்றவாளியாக சந்தித்துக் கொண்ட காட்சி அனைவரையும் கலகலப்பில் ஆழ்த்தியது.
மியாமியில்தான் இந்தக் கூத்து. மியாமியில் உள்ள ஒரு கோர்ட்டுக்கு வழக்கு ஒன்று வந்தது. போலீஸார் குற்றம் சாட்டப்பட்ட நபரை பெண் நீதிபதி மின்டி கிளேசர் முன்பு ஆஜர்படுத்தினர். ஆதர் பூத் என்ற அந்த நபரைப் பார்த்த நீதிபதிக்கு சட்டென மனதில் ஒரு மின்னல் வெட்டியது. இந்த மூஞ்சியை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே என்று யோசிக்க ஆரம்பித்தார்.
பூத்தை ஒரு கொள்ளை வழக்கி் குற்றம் சாட்டப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியிருந்தனர். தனது சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்ள பூத்திடம், நீதிபதி தொடர்ந்து பேசி பல விவரங்களைக் கேட்டார். அவர் சொல்லச் சொல்ல நீதிபதி முகத்தில் வியப்பு.
ஆம், பூத்தும், மிண்டியும் சிறு வயதில் நெருங்கிய நண்பர்களாக இருந்தவர்கள். தனது பால்ய காலத்து நண்பரை குற்றவாளியாக பார்க்க நேரிட்டு விட்டதே என்று வருத்தப்பட்டார் நீதிபதி மிண்டி.
பின்னர் அவர் நீதிமன்றத்திலேயே கூறுகையில், ‘நானும், பூத்தும் இளம் வயதில் நல்ல நண்பர்கள், பூத் நல்லவனாகத்தான் இருந்தான். பையன்களிலேயே அவன் மட்டும்தான் நல்லவனாக இருந்தான். நாங்கள் இருவரும் கால்பந்து விளையாடியிருக்கிறோம்' என்று கூறினார் மிண்டி.
இதைக் கேட்ட பூத் கண்ணீர் வீட்டுக் கதறி அழுதார். என் தோழியை இப்படிப்பட்ட இடத்திலா, நிலையிலா நான் சந்திக்க வேண்டும் என்று அவர் வருத்தப்பட்டார்.
ஆனால் அவரை சமாதானப்படுத்த முயன்ற மிண்டி. அதை விடுப்பா, நமக்கு எவ்வளவு வயசாகிப் போச்சு பாத்தியா என்று கேட்டு சிரிக்க, பூத்தும் சிரிக்க, கோர்டடே சிரித்தது.
அதன் பின்னர் நீதிபதி கடமைக்கு மாறிய மிண்டி, ‘இந்த விவகாரத்திலிருந்து நீ வெளியே வந்து, இனி்மேலாவது சட்டத்திற்கு உட்பட்டு நல்ல வாழ்க்கை வாழ வேண்டும்' என்று அறிவுரை கூறி, அவரை 44,000 டாலர் தொகைக்கு ஜாமீனில் விடுவிக்க உத்தரவிட்டார்.
சிவாஜி கணேசன், ரஜினிகாந்த் நடித்த படிக்காதவன் படத்தின் உல்டா கதையாக அல்லவா இருக்கிறது இது.