காபூல் அமெரிக்கன் பல்கலை.யில் தலிபான்கள் தாக்குதல்- 7 மாணவர்கள் உட்பட 13 பேர் பலி- 44 பேர் படுகாயம்
காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள அமெரிக்கன் பல்கலைக் கழகத்தில் நேற்று இரவு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 7 மாணவர்கள் உட்பட 13 பேர் பலியாகி உள்ளனர். 44 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
காபூல் அமெரிக்கன் பல்கலைக்கழகத்தின் நுழைவு வாயில் அருகே நேற்று பயங்கர குண்டுவெடிப்பை தலிபான் பயங்கரவாதிகள் நிகழ்த்தினர். இதனைத் தொடர்ந்து பல்கலைக் கழகத்துக்குள் நுழைந்து கண்மூடித்தனமாக தாக்குதலை நடத்தினர்.
தாக்குதல் நடத்திய தலிபான் பயங்கரவாதிகளுக்கு ஆப்கான் ராணுவத்தினர் பதிலடி கொடுத்தனர். சிறப்பு பாதுகாப்புப் படையினரும் வரவழைக்கப்பட்டனர்.
விடிய விடிய நடந்த இந்த மோதலில் தாக்குதல் நடத்திய 2 தலிபான் பயங்கரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர். தலிபான் பயங்கரவாதிகள் தாக்குதலில் 7 மாணவர்கள் உட்பட 13 பேர் பலியாகினர். 35 மாணவர்கள், 9 போலீசார் படுகாயமடைந்தனர்.
தலிபான்கள் தாக்குதல் நடத்திய அமெரிக்கன் பல்கலைக் கழகத்தில் மொத்தம் 700 மாணவர்கள் படித்து வருகின்றனர். தலிபான்கள் இந்த பல்கலைக் கழகத்தை இலக்கு வைத்து தொடர்ச்சியாக தாக்குதல்கள் நடத்தி வருவதால் பெரும் பீதி ஏற்பட்டுள்ளது.