கனடா மசூதியில் மர்ம நபர் துப்பாக்கிச்சூடு: தொழுகையில் ஈடுபட்டிருந்த 5 பேர் பலியான பரிதாபம்
கனடாவின் க்யூபெக் நகரில் உள்ள மசூதியில் நுழைந்த மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
க்யூபெக்: கனடாவின் க்யூபெக் நகரில் உள்ள மசூதியில் நுழைந்த மர்ம நபர் ஒருவர் தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது திடீர் துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதில் 5 இஸ்லாமியார்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் காயமடைந்துள்ளனர்.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அமெரிக்காவுக்குள் நுழைய 7 இஸ்லாமிய நாடுகளுக்கு தடைவிதித்தார். இதனை எதிர்த்து அமெரிக்காவின் பல இடங்களில் ட்ரம்ப்க்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றன.
ட்ரம்ப்பின் அறிவிப்பு வந்த அடுத்த சில மணி நேரத்தில் டெக்ஸாஸ் மாநிலத்தின் விக்டோரியா நகர மசூதிக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் கனடாவின் கியூபெக் நகரில் உள்ள மசூதி இஸ்லாமிய கலாச்சார மையத்தில் நேற்று இரவு அடையாளம் தெரியாத மர்மநபர்கள் துப்பாக்கியால் சுட்டத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மசூதியில் மாலைநேர தொழுகையின்போது மர்ம நபர்கள் 3 பேர் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர்.
இதில், 5 பேர் உயிரிழந்ததாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் முதல்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. தொழுகையின் போது 100க்கும் மேற்பட்டோர் மசூதியில் இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளன. சந்தேகத்தின்பேரில் 2 பேரை போலீஸார் கைது செய்துள்ளதாக முதல்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்க அதிபர் இஸ்லாமிய நாடுகளில் இருந்து மக்கள் குடியேறுவதற்க்கு தடை விதித்ததை அடுத்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடு கனடா உங்களை வரவேற்கிறது என்று தெரிவித்திருந்தார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெல்கம் டூ கனடா என்ற கருத்தை பதிவிட்டார். மேலும் அடக்குமுறை, போர் மற்றும் பயங்கரவாதத்தில் இருந்து வருபவர்களை கனடா வரவேற்கும். பன்முகத்தன்மை எங்கள் பலம், என்றும் கனடா பிரதமர் ஜஸ்டின் தெரிவித்திருந்தார். இந்நிலையில் கனடா மசூதியில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.