பூமியைத் தொட்டுத் தழுவிய நிலவின் நிழல்.. சூரிய கிரகணத்தின்போது!
நியூயார்க்: சூரியகிரகணத்தின் போது பூமியின் மீது நிலாவின் நிழல் விழுந்த அரிய புகைப்படங்களைத் தொகுத்து நாசா வெளியிட்டுள்ளது.
2016ம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இம்மாதம் 9ம் தேதி காலை தோன்றியது. இந்திய நேரப்படி காலை 5.30 மணி முதல் 9.30 வரை நீடித்த இந்த சூரிய கிரகணத்தை உலகின் பல பகுதிகளிலும் உள்ள மக்கள் பார்த்து ரசித்தனர்.
குறிப்பாக இதனை இந்தோனேஷியா மற்றும் ஆஸ்திரேலியாவில் முழுவதுமாக காண முடிந்தது. இந்தோனேஷியா முழுவதும் அதிகாலையிலேயே இருளில் மூழ்கியது.
|
சூரியகிரகணம்...
பூமிக்கும், சூரியனுக்கும் இடையே சந்திரன் வருகின்ற நிகழ்வான சூரியகிரகணம், அமாவாசை தினத்தில்தான் நிகழும். பொதுவாக, ஓராண்டில் 2 முதல் அதிகபட்சம் 5 சூரிய கிரகணங்கள் ஏற்படலாம்.
எச்சரிக்கை...
நடப்பு ஆண்டின் முதல் சூரிய கிரகணமான இதனை, சென்னையில் காலை 6.22 முதல் 15 நிமிடங்களுக்கு மக்கள் கண்டு ரசித்தனர். வெறும் கண்களால் சூரிய கிரகணத்தை பார்க்க வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததால், பெசன்ட் நகர் கடற்கரையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
பாதி கிரகணம்...
இந்தியாவைப் பொருத்தவரை பாதி அளவு சூரிய கிரகணத்தை மட்டுமே காண முடிந்தது. சூரிய கிரகணத்தை நேரடியாக பார்ப்பதால் நிரந்தர கண் பார்வை பாதிப்பு, பார்வையிழப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படும் என எச்சரிக்கப்பட்டிருந்தது. இதனால் டெலஸ்கோப் அல்ல கேமிராவை பயன்படுத்தி பார்க்கமாறு வானியல் ஆய்வாளர்கள் எச்சரித்திருந்ததனர்.
நாசா...
இந்நிலையில், சூரியகிரகணத்தை வானில் கண்டு களிக்க முடியவில்லையே என ஏங்கியவர்களுக்கு வித்தியாசமான பரிசைத் தந்திருக்கிறது நாசா. ஆம், சூரியகிரகணத்தின் போது பூமியின் மீது நிலாவின் நிழல் விழும் அரிய காட்சிகளைப் புகைப்படங்களாக இணைத்து அது வெளியிட்டுள்ளது.
டீப் ஸ்பேஸ்...
நாசாவின் ‘டீப் ஸ்பேஸ் செயற்கைக்கோள்' (Deep Space Climate Observatory satellite) இந்தப் புகைப்படங்களை எடுத்துள்ளது. சுமார் 13 புகைப்படங்களை சேர்த்து இந்த தொகுப்பை நாசா தயாரித்துள்ளது.