பாகிஸ்தான் இடைக்கால பிரதமராகிறார் ஷாகீத்காகான் அப்பாசி
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் இடைக்கால பிரதமராக ஷாகீத்காகான் அப்பாசி அறிவிக்கப்பட்டுள்ளார்.
பனாமா பேப்பர் ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை அந்த நாட்டு உச்சநீதிமன்றம் பதவி நீக்கம் செய்து பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், நவாஸ் தனது தம்பி ஷபாஸ் ஷெரீப்பை பிரதமராக்க முடிவு செய்துள்ளார். ஆனால் இடைக்கால பிரதமராக நவாஸ் ஷெரீப் அமைச்சரவையில் பெட்ரோலிய துறை அமைச்சராக பதவி வகித்த ஷாகீத்காகான் அப்பாசி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஷபாஸ் நாடாளுமன்றத்திற்கு தேர்வாகி பிரதமராக பொறுப்பை ஏற்கும் வரை, இடைக்கால பிரதமராக ஷாகீத்காகான் பதவி வகிப்பார் என பாகிஸ்தானின் முன்னணி ஊடகமான 'டான்' செய்தி வெளியிட்டுள்ளது.
இன்று நடைபெற்ற நவாஸ் ஷெரீப்பின், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி நாடாளுமன்ற கமிட்டி ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.