பக்ரீத் பண்டிகை: துபாய் சிறைகளில் இருந்து 490 கைதிகள் விடுதலை
துபாய்: பக்ரீத் பண்டிகையையொட்டி சிறைகளில் கைதிகளாக அடைத்து வைக்கப்பட்டுள்ள பல்வேறு நாட்டினரில் 490 பேரை விடுதலை செய்யுமாறு துபாய் நாட்டின் ஆட்சியாளரும், ஐக்கிய அரபு அமீரக துணை ஜனாதிபதியும், பிரதமருமான ஷேக் அஹமத் பின் ரஷித் அல் மக்தூம் இன்று உத்தரவிட்டுள்ளார்.
இந்த பொது மன்னிப்பின் மூலம் விடுதலையாகும் கைதிகள் அனைவரும் நேர்மையான பாதையை இனி கடைபிடித்து, தங்களது குடும்பத்தாருடன் இணைந்து வாழ துபாய் ஆட்சியாளர் ஷேக் அஹமத் பின் ரஷித் அல் மக்தூம் விரும்புவதாகவும், குறிப்பாக பக்ரீத் பண்டிகையை அவர்களும் தங்களது குடும்பத்தினருடன் சேர்ந்து கொண்டாட வேண்டும் என ஆசைப்படுவதாகவும் துபாய் அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த 490 கைதிகளும் உடனடியாக விடுதலை செய்யப்படுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், ரஸ் அல் கைமா ஆட்சியாளரான ஷேக் சவுத் பின் ஸக்ர் அல் குவாஸிமி பல்வேறு நாடுகளை சேர்ந்த 238 கைதிகளை விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார். அவர்கள் விடுதலை ஆவதற்கு செலுத்த வேண்டிய அபராத தொகை அனைத்தையும் அரசே ஏற்றுக்கொண்டு வழங்கும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.
இதே வழியை பின்பற்றி ஃபுஜைரா ஆட்சியாளரான ஷேக் ஹமாத் பின் முஹம்மது அல் ஷர்கியும் பல்வேறு நாடுகளை சேர்ந்த 40 கைதிகளை விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார். இதேபோல் உம் அல் கொய்வெய்ன் ஆட்சியாளரான ஷேக் சவுத் பின் ரஷித் அல் முஅல்லாவும் பல்வேறு நாடுகளை சேர்ந்த சில கைதிகளை விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.
மேற்கண்ட பகுதி சிறைகளில் இருந்து விடுவிக்கப்படும் வெளிநாட்டைச் சேர்ந்த கைதிகள் உடனடியாக தங்களது தாய்நாட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என தெரிகிறது.