இழுத்து மூடப்பட்டது ஷான் வார்னே பவுண்டேஷன்..!
கான்பெரா: முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷான் வார்னே பெயரில் தொடங்கப்பட்ட பவுண்டேஷன் தற்போது மூடப்பட்டு விட்டது. கணக்கை சரிவர காட்டாதது, நிதியை வழங்கியதில் ஏற்பட்ட முறைகேடுகள் ஆகிய புகார்களைத் தொடர்ந்து இந்த பவுண்டேஷன் மூடப்பட்டு விட்டது.
பல்வேறு புகார்களைத் தொடர்ந்து கடந்த ஆண்டு முதல் இந்த பவுண்டேஷன், விக்டோரியா மாகாண நுகர்வோர் விவகாரத்துறையால் கண்காணிக்கப்பட்டு வந்தது. மேலும் வருடாந்திர நிதி செலவீன அறிக்கையைும் வார்னே பவுண்டேஷன் தாக்கல் செய்யவில்லை.
நலிவுற்ற, வசதியவற்ற சிறார்களுக்கு உதவுவதற்காக இந்த பவுண்டேஷன் ஆரம்பிக்கப்பட்டது. இது நிதி சேகரிப்பிலும் இறங்கி வந்தது. ஆனால் இப்படி வந்த பணத்தை உரியவர்களுக்கு செலவிடாமல் தனது நிர்வாக செலவுகளுக்கே அது செலவிட்டதாக சர்ச்சை எழுந்தது.
மேலும் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 18ம் தேதி கணக்கு வழக்குகள் ஆடிட்டுக்கு அனுப்பப்படும் என்ற உறுதிமொழியையும் அது மீறி விட்டது. ஆனால் எதையும் அது செய்யவில்லை.
இதுகுறித்து வார்னே தனது பேஸ்புக் பக்கத்தில் முன்பு எழுதுகையில், எங்கள் மீதான புகார்கள் அபத்தமானவை. எங்களிடம் மறைக்க எதுவும் இல்லை. எல்லாமே தெளிவாகத்தான் உள்ளது. ஆடிட்டுக்கு அனுப்பி நேரம் விரயமாவதை விட அந்த சமயத்தில் சிலருக்கு உதவ முடியுமே என்றுதான் நாங்கள் கருதினோம் என்று கூறியிருந்தார் வார்னே.
கடந்த 2004ம் ஆண்டு இந்த பவுண்டேஷனை வார்னே தொடங்கினார். இந்த நிலையில் தற்போது இதை மூடி விட்டனர்.