ராவல்பிண்டி சிறையில் நவாஸ் ஷெரீப், மரியத்துக்கு பி பிரிவு அறை.. டிவி, ஏசி வசதி உண்டு!
Recommended Video
ராவல்பிண்டி: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது மரியம் ஆகியோர் ராவல்பிண்டி நகரில் உள்ள உயர் பாதுகாப்பு சிறையான அதியாலாவில் அடைக்கப்பட்டுள்ளனர்.
லண்டனில் இருந்து அபுதாபி வழியாக லாகூர் விமான நிலையம் வந்த நவாஸ் ஷெரீப் மற்றும் அவர் மகள் மரியம் ஆகியோர் நேற்று இரவு விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர்.
இதன் பிறகு சிறப்பு விமானத்தில் மூலமாக அவர்கள் ராவல்பிண்டி அழைத்துச் செல்லப்பட்டு நள்ளிரவில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
விஐபிகளான இவர்களுக்கு, சிறையில் பி பிரிவு வசதி கொண்ட அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. டிவி, பிரிட்ஜ், ஏசி போன்ற வசதிகளை சொந்த செலவில் வாங்கி வைத்துக்கொள்ள, பி பிரிவு கைதிகளுக்கு அனுமதியுள்ளது.
முன்னதாக, இஸ்லாமாபாத் நீதிபதி மேற்பார்வையில் டாக்டர்கள் நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது மகள் மரியம் ஆகியோரின் உடல்நிலையை பரிசோதித்தனர். அப்போது, போலீஸ் உயர் அதிகாரிகளும் உடன் இருந்தனர். பரிசோதனை முடிவில் இருவருமே நல்ல உடல் தகுதியுடன் உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
பனாமா பேப்பர்ஸ் வழக்கில் ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான நவாஸ் ஷெரீப்புக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது பாகிஸ்தான் நீதிமன்றம். மரியத்திற்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
நவாஸ் ஷெரிப்பின் மனைவி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு லண்டன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை லண்டனிலேயே விட்டுவிட்டு நவாஸ் ஷெரீபும் அவரது மகளும் பாகிஸ்தான் திரும்பி சிறை சென்றுள்ளனர். வரும் 25 ஆம் தேதி பாகிஸ்தானில் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது இந்த சூழ்நிலையில் நவாஸ் ஷெரீப்பின் சிறைவாசம் முக்கியத்துவம் பெறுகிறது.