சீன பயணம்: மலாலா நோபல் விழாவில் ஷெரீஃப் பங்கேற்க மாட்டார்
இஸ்லாமாபாத்: மலாலா யூசப்சாய் அமைதிக்கான நோபல் பரிசு பெறும் நிகழ்ச்சியில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃபால் கலந்து கொள்ள மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2014ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு பாகிஸ்தானிய சிறுமி மலாலா யூசப்சாய்க்கும், இந்தியாவின் கைலாஷ் சத்யார்த்திக்கும் கிடைத்துள்ளது. வரும் டிசம்பர் மாதம் 10ம் தேதி நார்வேயில் உள்ள ஆஸ்லோ நகரில் நடக்கும் நிகழ்ச்சியில் மலாலாவுக்கும், சத்யார்த்திக்கும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு மலாலா பிரதமர் நரேந்திர மோடிக்கும், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃபுக்கும் அழைப்பு விடுத்தார். இந்நிலையில் இது குறித்து தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத் துறை விவகாரத்தில் ஷெரீஃபின் ஆலோசகரான சர்தாஜ் அஜீஸ் கூறுகையில்,
நோபல் பரிசு வழங்கும் நாள் அன்று நவாஸ் ஷெரீஃப் அரசாங்க விஷயமாக சீனா செல்கிறார். அதனால் அவர் பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வது சாத்தியம் அல்ல என்றார்.
மலாலாவுக்கு நோபல் பரிசு கிடைத்துள்ளது அவரை தலையில் துப்பாக்கியால் சுட்ட தாலிபான்களை எரிச்சல் அடைய வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.