அன்னை தெரசாவின் சேவையை அரசியலாக்காதீர்கள்...: வாடிகன் கண்டனம்
வாடிகன்சிட்டி: ‘புனிதமான கிறிஸ்தவ சமய குருவின் சேவையை அரசியலாக்க வேண்டாம்' என ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு வாடிகன் கண்டனம் தெரிவித்துள்ளது.
ராஜஸ்தானில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் அன்னை தெரசா குறித்து பேசியது சர்ச்சையை உண்டாக்கியது. அப்போது அவர், ‘அன்னை தெரசாவின் சேவைகள் நல்லதாக இருக்கலாம். ஆனால், சேவை செய்து மதமாற்றம் செய்வதை அவர் நோக்கமாக கொண்டிருந்தார்'' எனத் தெரிவித்திருந்தார்.
மோகன் பகவத்தின் இந்தப் பேச்சுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் கிறிஸ்தவ அமைப்புகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், இது தொடர்பாக வாடிகன் செய்தி தொடர்பாளர் தொலைக்காட்சி ஒன்றில் கூறியதாவது:-
‘‘புனிதமான கிறிஸ்தவ சமய குருவின் சேவையை அரசியலாக்க கூடாது. ஆசீர்வதிக்கப்பட்ட அன்னை தெரசா சமுதாயத்தில் அடக்கி ஒடுக்கப்பட்ட ஏழை, எளிய மக்களின் நம்பிக்கை வழிகாட்டியாகவும், கலங்கரை விளக்கமாகவும் திகழ்ந்தார். அவரது வாழ்க்கை உலக மக்களுக்கு ஒரு தூண்டுகோலாக இருந்தது'' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.