மலேசிய விமானம் எம்.ஹெச்.17 விழுந்த இடத்தில் கருப்பு பெட்டியை தேடிய ரஷ்ய போராளிகள்: பகீர் வீடியோ
கீவ்: உக்ரைன் வழியாக சென்ற மலேசிய விமானம் எம்.ஹெச்.17-ஐ பக் ஏவுகணை வீசித் தாக்கிய பிறகு விமானம் விழுந்த இடத்தில் ரஷ்ய ஆதரவுப்படையினர் பயணிகளின் உடைமைகளை ஆய்வு செய்த வீடியோ வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் 17ம் தேதி நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு 298 பேருடன் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச்.17 கிளம்பியது. விமானம் உக்ரைனில் ரஷ்ய ஆதரவுப்படையினர் பிடியில் உள்ள இடத்தை கடக்கையில் பக் ஏவுகணை வீசித் தாக்கப்பட்டது.
இதில் விமானத்தில் இருந்த 298 பேரும் உடல் சிதறி பலியாகினர். இந்த சம்பவம் நடந்து இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது.
வீடியோ
விமானம் தரையில் விழுந்த வேகத்தில் ரஷ்ய ஆதரவுப்படையினர் பயணிகளின் உடைமைகளை சோதனை செய்ததுடன் விமானத்தின் கருப்புப்பெட்டியை தேடியபோது எடுத்த வீடியோ இன்று வெளியிடப்பட்டுள்ளது.
பயணிகள் விமானம்
ரஷ்ய ஆதரவுப்படையினர் மலேசிய விமானத்தை போர் விமானம் என தவறாக நினைத்து தாக்கியுள்ளனர். விமானம் தரையில் விழுந்து கிடந்த இடத்தில் அவர்கள் ஆய்வு நடத்திவிட்டு ஏராளமான உடல்கள், இது பயணிகள் விமானம் என்று கூறுவது வீடியோவில் பதிவாகியுள்ளது.
மலேசியர்கள்
ரஷ்ய ஆதரவுப்படையினர் பயணிகளின் உடல்களை பார்த்துவிட்டு இவர்கள் வெளிநாட்டவர்கள், மலேசியாக்காரர்கள் என்று கூறி விமான சிப்பந்தி ஒருவரின் பெயர் டேக்கை காண்பிக்கிறார்கள். மற்றொருவர் ஒரு பயணியின் பையில் இருந்த ஆஸ்திரேலியாவின் பெயரை காண்பிக்கிறார்.
பொதுமக்கள்
நாம் விமானத்தின் கருப்புப் பெட்டியை எடுக்கும் வரையில் இந்த பகுதிக்குள் எந்த பொதுமக்களும் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள் என்று ரஷ்ய ஆதரவுப்படையின் தலைவர் உத்தரவிடுவது வீடியோவில் பதிவாகியுள்ளது.
வழக்கு
ரஷ்ய ஆதர்வுப்படை தலைவர் இகோர் கிர்கின் தான் மலேசிய விமானத்தை தாக்க திட்டமிட்டதாகக் கூறி 900 மில்லியன் அமெரிக்க டாலர்கள் கேட்டு விமானத்தில் சென்று பலியானவர்களின் குடும்பத்தார் வழக்கு தொடர்ந்துள்ளனர். இங்கிலாந்தைச் சேர்ந்த 6 குடும்பங்கள் உள்பட 18 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் இகோர் மீது வழக்கு தொடர்ந்துள்ளனர்.
அமெரிக்கா
மலேசிய விமானத்தை ரஷ்ய ஆதரவுப்படையினர் தான் பக் ஏவுகணை வீசித் தாக்கியதாக உக்ரைன் அரசு தெரிவித்தது. ஆனால் உக்ரைன் ராணுவம் தாக்கியதாக ரஷ்யா தெரிவித்தது. இந்நிலையில் ரஷ்ய ஆதரவுப்படையினர் தான் விமானத்தை சுட்டு வீழ்த்தியிருக்கக்கூடும் என்று அமெரிக்கா தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.