ஈரானில் நாடாளுமன்றம் உட்பட 3 இடங்களில் தீவிரவாதிகள் பயங்கர தாக்குதல்- 7 பேர் பலி!
ஈரான் நாடாளுமன்றத்துக்குள் நுழைந்த மர்ம நபர்கள் எம்பிக்களை துப்பாக்கி முனையில் சிறைபிடித்துள்ளனர்.
டெஹ்ரான்: ஈரானில் நாடாளுமன்றம் உட்பட 3 இடங்களில் தீவிரவாதிகள் அடுத்தடுத்து தாக்குதல் நடத்தியதில் 7 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
தீவிரவாத இயக்கங்களுக்கு உதவும் கத்தார் நாட்டுடனான உறவுகளை துண்டிப்பதாக செளதி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், எகிப்து, பஹ்ரைன் ஆகிய நாடுகள் பிரகடனம் செய்திருக்கின்றன. இந்த விவகாரத்தில் சமாதான முயற்சிகளை குவைத் முன்னெடுத்து வருகிறது. இதனால் அரபு நாடுகளில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் ஈரான் நாடாளுமன்றத்துக்குள் ஆயுதம் தாங்கிய மர்ம நபர்கள் கும்பல் இன்று அதிரடியாக உள்ளே நுழைந்தது. துப்பாக்கி முனையில் எம்பிக்கள் சிலரையும் பிணைக் கைதிகளாக அந்த கும்பல் சிறை பிடித்தது.
இதையடுத்து எம்பிக்களை மீட்க ஈரான் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். பின்னர் எம்பிக்களை சிறைபிடித்த 2 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.
இத்தாக்குதல் நடந்த போதே டெஹ்ரானில் கொமேனி தர்கா மற்றும் மெட்ரோ ரயில் நிலையம் ஒன்றிலும் தீவிரவாதிகள் அடுத்தடுத்து தாக்குதல்கள் நடத்தினர். இத்தாக்குதல்களில் 7 பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
டெஹ்ரானில் ஒரு மணிநேரத்தில் அடுத்தடுத்து 3 இடங்களில் தாக்குதல் நடந்த சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.