எபோலாவுக்குப் பாடிகார்ட் பலி.. 21 நாள் சோதனைக்கு தானாக முன்வந்த சியரா லியோன் து.அதிபர்!
லைபீரியா: சியரா லியோன் நாட்டு துணை அதிபர் சாமுவேல் சாம் சுமனாவிற்கு எபோலா நோய் பரிசோதனை நடத்தப்பட்டு வருகின்றது. இந்த சோதனைக்கு அவராகவே முன்வந்து தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
லைபீரியா, சியரா லியோன் உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளில் எபோலா நோய் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த நோய் சுமார் 10 ஆயிரம் உயிர்களை இதுவரை காவு வாங்கியுள்ளது.
இந்த நாடுகளில் எபோலா அறிகுறி தென்படும் மக்கள் 21 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு சோதனைகள் முடித்து எபோலா இல்லை என சான்றிதழ் பெற வேண்டும்.
சியரா லியோன் துணை அதிபர் சாமுவேல் சாம் சுமனாவின் பாதுகாவலர்களில் ஒருவர், எபோலா நோய் தாக்கி சமீபத்தில் உயிரிழந்தார். எனவே சாமுவேலும் எபோலா பரிசோதனை மேற்கொள்ள திட்டமிட்டார். அதன்படி, தானே முன்வந்து 21 நாட்கள் தனிமை பரிசோதனையை அவர் தொடங்கி உள்ளார். இது அங்குள்ள மக்களை ஆச்சரியப்படுத்தி உள்ளது.
அதிபர் எமஸ்ட் பாய் கரோமா, வருகிற ஞாயிற்றுக்கிழமை பெல்ஜியம் செல்கிறார். அப்போது அதிபரின் பணிகளை சாமுவேல் தான் கவனிக்க வேண்டும். ஆனால் சாமுவேல் எபோலா பரிசோதனைக்காக தனிமைப்படுத்தப்படுவதால், வீட்டிலிருந்தே அதிபர் பணிகளை கவனிப்பார் என அறிவிக்கப்பட்டு உள்ளது.