‘சோம்பேறி சீக்கியர்’ எனத் திட்டிய சகஊழியர்... ரூ 18 லட்சம் நஷ்டஈடு தர தொழிலாளர் தீர்ப்பாயம் உத்தரவு
எடின்பர்க் : தரக்குறைவாக நடத்தியதாக சீக்கியர் ஒருவர் தொடர்ந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நிறுவன தலைவரும், அங்கு பணி புரியும் ஊழியர்களும் ரூ 18 லட்சத்தை நஷ்ட ஈடாக தர வேண்டும் என ஸ்காட்லாந்து தொழிலாளர் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
ஸ்காட்லாந்தில் உள்ள கிரீனோக் நகரிலுள்ள பி.கே. இம்பீரியல் ரீடெய்ல் என்னும் பல்பொருள் அங்காடியில் பணியாற்றி வருபவர் பரம்ஜித் சிங் என்ற சீக்கியர். இவரது மனைவி ஒரு வெள்ளைக்கார பெண்மணி ஆவார்.
பரம்ஜித் சிங்கை அவரது நிறுவனத்தின் தலைவரும், உடன் பணிபுரிபவர்களும் தொடர்ந்து இனரீதியாக விமர்சித்து வந்துள்ளனர். அவரிடம் கடுமையான பணிச்சுமைகளை கொடுத்து அதை உடனடியாக நிறைவேற்றித் தரும்படியும் துன்புறுத்தியுள்ளனர்.
இந்நிலையில் சம்பவத்தன்று பரம்ஜித் சிங்கை அவரது சக ஊழியர் ஒருவர் கடுமையாக திட்டியுள்ளார். அதாவது, ‘‘உன்னுடன் எப்படி ஒரு வெள்ளைக்கார பெண்மணி குடும்பம் நடத்துகிறார் என்று எனக்கு தெரியவில்லை. உங்களுக்கு சுத்தமாகவும் இருக்க தெரியவில்லை. எப்படி வாழ்க்கை நடத்துவது என்றும் தெரியவில்லை'' என அவர் கூறியுள்ளார். மேலும், பேச்சினூடே ‘சோம்பேறி சீக்கியர்' எனவும் விமர்சித்துள்ளார் அந்த ஊழியர்.
இதனால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான பரம்ஜித் சிங் ஸ்காட்லாந்து தொழிலாளர் தீர்ப்பாயத்தில் இது தொடர்பாக வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், இன ரீதியாக விமர்சித்த நிறுவனத்தின் தலைவரும், சக ஊழியர்களும் பரம்ஜித் சிங்கிற்கு ரூ.18 லட்ச ரூபாய் (18 ஆயிரம் பவுண்டு) நஷ்டஈடு வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.