இங்கிலாந்து பணியிடங்களில் சீக்கியர்கள் “டர்பன்” அணிய இனி தடை இல்லை
லண்டன்: இங்கிலாந்து நாட்டில் பணியிடங்களில் சீக்கிய மதத்தினைச் சேர்ந்தவர்கள் தலைப்பாகை அணிவதில் எந்த தடையும் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து நாட்டில் 1989 ஆம் ஆண்டு முதல், கட்டுமான தொழிலில் மட்டும் ஹெல்மெட் அணிவதில் இருந்து சீக்கியர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டு வந்தது.
ஆனால் மற்ற துறைகளில் தலைப்பாகைக்கான இந்த விலக்கு வழங்கப்படவில்லை.
தலைப்பாகை அணிந்தால் ஒழுங்கு நடவடிக்கை:
மாறாக பிற துறைகளில் ஹெல்மெட்டுக்கு பதிலாக தலைப்பாகை அணிந்தால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. பணியில் இருந்து நீக்கப்படவும் வாய்ப்பு இருந்து வந்தது.
சட்டத்தின் ஓட்டை:
கட்டுமான துறை தவிர்த்து பிற துறைகளில் ஹெல்மெட் அணிவதில் இருந்து விலக்கு அளிக்காமல் சட்டத்தில் உள்ள ஓட்டை தடுப்பதாக சீக்கிய அமைப்புகள் அரசிடம் கூறி வந்தன.
ஏற்றுக்கொண்ட இங்கிலாந்து அரசு:
இந்த நிலையில் அவர்களது கோரிக்கையை இங்கிலாந்து அரசு ஏற்றுக்கொண்டு விட்டது. இதற்கு தேவையான சட்ட திருத்தம் செய்யப்பட்டு விட்டது. இதன் காரணமாக பணி இடங்களில் தலைப்பாகை அணிவதற்கு தடை இல்லை. சீக்கியர்களுக்கு பெரும்பாலான துறைகளில் ஹெல்மெட் அணிவதில் இருந்து விலக்கு வழங்கப்பட்டுள்ளது.
சட்டத்தில் திருத்தம்:
இதுகுறித்து இங்கிலாந்தில் உள்ள சீக்கிய கவுன்சிலின் செய்தி தொடர்பாளர் குரிந்தர் சிங் ஜோசன் கருத்து தெரிவிக்கையில், "எங்கள் வேண்டுகோளுக்கு நாடாளுமன்றம் செவிசாய்த்து இருக்கிறது. சட்டத்தில் மாற்றம் செய்திருக்கிறது" என கூறினார்.