ஐ.நா. தலைமையகம் எதிரே பிரதமர் மோடிக்கு எதிராக சீக்கியர்கள், படேல்கள் போராட்டத்தால் பரபரப்பு!
நியூயார்க்: அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய நாடுகள் சபை தலைமையகம் அருகே சீக்கியர்கள், படேல்கள் போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.
அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி ஐ.நா. சபை ஆண்டு பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார். இதன் பின்னர் ஐ.நா. வளர்ச்சி உச்சி மாநாட்டில் கலந்து கொண்டும் உரையாற்றினார்.
அப்போது ஐ.நா. தலைமையகத்துக்கு வெளியே 200க்கும் மேர்பட்ட சீக்கியர்கள், படேல்கள் பிரதமர் மோடிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர். சீக்கியர்களைத் தனிநாடாக்கும் பொதுவாக்கெடுப்பை 2020ஆம் ஆண்டு நடத்த வேண்டும் என்று சீக்கியர்கள் கோரிக்கையை முன்வைத்து முழக்கமிட்டனர்.
இதேபோல் இடஒதுக்கீடு கோரி போராடிய 4,000 படேல் இளைஞர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்; அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று படேல்கள் முழக்கங்களை எழுப்பினர். ஆனால் நியூயார்க்கில் உள்ள படேல் சமூகத்தின் மற்றொரு பிரிவினர் பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்று பதாகைகளை ஏந்தியும் இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.