நடுவானில் செயலிழந்த என்ஜின்கள்.. விமானியின் சாமர்த்தியத்தால் உயிர் தப்பிய 194 பயணிகள்!
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் இருந்து ஷாங்காய் சென்ற சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தின் என்ஜின்கள் திடீரென நடுவானில் செயலிழந்தது. எனினும் விமானியின் சாமர்த்தியத்தால் விமானம் பத்திரமாக தரையிறங்கியது. 194 பயணிகள் உயிர் தப்பினர்.
கடந்த சனிக்கிழமையன்று சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையத்தில் இருந்து ஏர் பஸ் ஏ. 330-300 என்ற சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று 182 பயணிகளுடன் புறப்பட்டது. ஷாங்காய் நோக்கிச் சென்று கொண்டிருந்த அந்த விமானம், நடுவானில் பறந்து கொண்டிருந்த போது மோசமான வானிலை காரணமாக என்ஜின்களில் மின்சக்தியை இழந்தது. இதனால், விமானத்தின் என்ஜின்கள் தற்காலிகமாக செயலிழந்தது.
அப்போது விமானம் 39000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தது. எனினும் செயல்பாட்டு வழிமுறைகளை திறமையாக கையாண்ட விமானி, விரைவில் இரு என்ஜின்களையும் வழக்கமான செயல்பாட்டுக்கு கொண்டுவந்தார். இதனால் 182 பயணிகளும், 12 விமான ஊழியர்களும் இரவு 10.56 மணியளவில் எவ்வித ஆபத்தும் இல்லாமல் ஷாங்காய் நகரில் தரையிறங்கினர்.
அதனைத் தொடர்ந்து விமானத்தில் என்ஜின்கள் சோதனையிடப்பட்டன. அப்போது அவை எவ்வித குறைபாடும் இல்லாமல் நல்ல முறையில் இயங்குவது உறுதி செய்யப்பட்டது.
சாமர்த்தியமாக செயல்பட்டு விமானத்தை விபத்தில் இருந்து காப்பாற்றி, 182 பயணிகளின் உயிரைக் காத்த விமானியின் செயலை பயணிகள் பாராட்டினர்.